மாகாண சபைகளின் முதலமைச்சர்களுக்கு நாடாளுமன்றிலும் அமைச்சரவையிலும் இடமளிக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
……….
நாட்டின் அரசிலமைப்பிற்கு டக்ளஸ் தேவானந்தா வெளிப்படுத்திய புதிய திட்டங்களுள் சில
மாகாண சபைகளின் முதலமைச்சர்களுக்கு நாடாளுமன்றிலும் அமைச்சரவையிலும் இடமளிக்கப்பட வேண்டும் என்று ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா புதிய திட்டத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.
பல்வேறு துறைசார்ந்த புத்திஜீவிகளையும் உள்ளடக்கிய அரச சார்பற்ற நிறுவனத்தின் (OTI) பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே இக்கருத்து வெளிப்படுத்தப்பட்டது.
புதிய அரசியலமைப்பு தொடர்பாக நாடளாவிய ரீதியில் உள்ள அரசியல் தரப்புக்கள் மத்தியிலும் பொது நிலைப்பாட்டினை ஏற்படுத்தும் நோக்கோடு குறித்த அரசார்பற்ற நிறுவனத்தினால் சந்திப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் கடந்த 18.07.2026 ஈ.பி.டி.பி. கட்சியை சந்தித்திருந்தனர்.
இதன்போது மேலும் தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா, தனது அனுபவங்களின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்களை சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, “மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை செழுமைப்படுத்துவதற்கும், இனங்களுக்கும் சமூகங்களுக்கும் இடையிலான புரிந்தணர்வை ஏற்படுத்துவதற்கும், சீரான வளர்ச்சியை வேகமாக ஏற்படுத்துவதற்கும், மாகாணங்களின் முதலமைச்சர்கள் நாடாளுமன்றிலும் அமைச்சரவையிலும் அங்கம் வகிக்கும் ஏற்பாடு அர்த்தபூர்வமான களத்தினை ஏற்படுத்தும்.
அதேபோன்று, யுத்தம் காரணமாக. 18 வயதினை அடைந்த பின்னர் புலம்பெயர்ந்து சென்றவர்களுக்கும், தொழில் நிமித்தம் வெளிநாடுகளில் தங்கி இருப்போருக்கும் வாக்குரிமையை வழங்க வேண்டும்.
அர்த்தபூர்வமான அதிகாரப் பகிர்வே புதிய அரசியலமைப்பின் அடிப்படையாக இருக்க வேண்டுமே தவிர, ஒற்றையாட்சி, சமஸ்டி என்ற பெயர் பலகையில் கவனத்தினை குவிப்பது, பிடிவாதமாக இருப்பது நாட்டின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமாக இருக்காது.
கடந்த காலங்களில் மத்திய அரசினால் எடுக்கப்பட்ட மாகாணங்களிற்கான அதிகாரங்களை மீளக் கையளிப்பதுடன், பொலிஸ் மற்றும் காணி உட்பட்ட மாகாண சபை அதிகாரங்கள் முழுமையாக அமுல்ப்படுத்தப்பட வேண்டும்.
அதேபோன்று, மாகாணங்களுக்கான அதிகார பகிர்வில் உள்ள இணைப்பு பட்டியல் நீக்கப்பட்டு, அதில் இருக்கின்ற விடயங்களுள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சிலவற்றை தவிர்ந்த அனைத்தும், மாகாண பட்டியலில்; இணைக்கப்பட வேண்டும்.
மாகாண சபைகளுக்கான அதிகார பகிர்வானது, வடக்கு கிழக்கு மக்களுக்காக உருவாக்கப்பட்டது என்ற அடிப்படையில் குறித்த இரண்டு மாகாணங்களுக்கும் விசேட அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதுடன், மாகாண சபை என்பது மாகாண அரசு என்று அடையாளப்படுத்தப்பட வேண்டும்
தேசிய நிதி ஆணைக்குழு என்பது நிதி ஒதுக்கீடுகளில் காத்திரமான தாக்கம் செலுத்தும் நிலையில், ஒவ்வொரு மாகாணங்களினதும் எதிர்பார்ப்புக்களை உணர்வுபூர்வமாக புரிந்து கொண்ட – அதே மாகாணத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் நிதி ஆணைக்குழுவில் உறுப்பினர்களாக இருப்பதனையும், அதேபோன்று, அந்தந்த மாகாணங்களை பூர்வீகமாக கொண்டவர்களையே ஒவ்வொரு மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்படுவதும் அரசியலமைப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
அதேபோன்று, தற்போதைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கப்பட்டு, ஜனாதிபதி நாடாளுமன்றால் தெரிவு செய்யப்பட வேண்டும்” என்பது போன்ற மேலும் பல விடயங்களை தெரிவித்துடன், இதுதொடர்பான எழுத்து மூல ஆவணம் சமர்ப்பிக்கப்டும் எனவும். தெரிவித்தார்.




