டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்காரவிடம் நடத்தப்பட்ட நீண்ட விசாரணையின் போது வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில், மத்திய புலனாய்வுப் பணியகத்தினர் நேற்று (07) ஹன்வெல்ல தித்தெனிய பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி மற்றும் ஒரு ரிப்பீட்டர் ஷொட்கன் ரக துப்பாக்கி ஆகியவற்றை மீட்டெடுத்தனர்.
இந்த ஆயுதங்களை பஸ் லலித்தும் அவரது அடியாட்களும் கொலைகள் மற்றும் அச்சுறுத்தல்களில் ஈடுபடப் பயன்படுத்தியதாக மத்திய புலனாய்வுப் பணியகத்தினர் சந்தேகிக்கின்றனர்.
அதன்படி, ஹன்வெல்ல மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபத்தில் நடந்த கொலைகள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளில் இந்தத் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதா என்பதைச் சரிபார்க்க, அவற்றை அரசாங்கப் பகுப்பாய்வாளரிடம் சமர்ப்பிப்போம் என்று ஒரு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி கூறினார். பஸ் லலித்தின் வழிகாட்டுதலின் கீழ் ஹன்வெல்ல மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 06 கொலைகள் நடந்துள்ளதை இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார். அதுமட்டுமின்றி, ஹன்வெல்ல மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொழில் செய்து வந்த 21 தொழிலதிபர்களிடமிருந்து அவர் பணம் பறித்ததும் தெரியவந்துள்ளது.
அவர் டுபாயில் தங்கியிருந்தபோது இந்தக் குற்றங்கள் அனைத்தையும் செய்துள்ளார் என்றும், அவரது குற்றங்களுக்கு ஆதரவளித்த அடியாட்கள் குறித்த தகவல்கள் இந்நாட்டிலிருந்து வெளிவருவதால், அவர்களையும் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்றும் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது.




