திருகோணமலை மாவட்டத்தில் வரலாற்று, மத மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில், புத்த விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நாளையதினம் இடம்பெறவுள்ளதாக வெளியாகிய தகவல்கள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் ஆழ்ந்த கவலையையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளதாக இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட ஆயுள் கால உறுப்பினரும், ஜெயக்குமாரின்’ஸ் குளோபல் அமைப்பின் தலைவரும், சமூக சேவையாளருமான குமார் ஜெயக்குமாரன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஊடகங்களுக்கு
இன்று (21) கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கன்னியா வெந்நீர் ஊற்று என்பது தமிழர்களுக்கும், குறிப்பாக இந்து மக்களுக்கும் நீண்டகால வரலாற்று மற்றும் ஆன்மீக தொடர்புடைய புனிதத் தலமாகும். இப்பகுதியில் சிவன் ஆலயமும் பிள்ளையார் ஆலயமும் இருந்ததாகவும், முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக இறுதிக்கிரியைகள் மேற்கொள்ளப்பட்ட புனித இடமாகவும் காணப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்ததாகக் கூறப்படும் பகுதியில் புத்த விகாரைக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நடைபெறவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் மக்களிடையே பெரும் பதற்றத்தையும் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் உருவாக்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
கன்னியா என்பது ஒரு மதத்தலம் மட்டுமல்ல, அது திருகோணமலையின் வரலாறு, பாரம்பரியம் மற்றும் தமிழ் மக்களின் அடையாளத்துடன் பின்னிப் பிணைந்துள்ள ஒரு முக்கிய மரபுரிமைச் சின்னமாகும். இதுபோன்ற வரலாற்று மற்றும் மத உணர்வுகள் சம்பந்தப்பட்ட இடங்களில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானமும் அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்து, சட்ட நடைமுறைகளுக்கு இணங்கவும், தொல்லியல் மற்றும் வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பில் பல்வேறு சமூக அமைப்புகளும் பொதுமக்களும் முன்வைக்கும் கவலைகளை அரசாங்கமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உரிய முறையில் கவனத்தில் கொள்ள வேண்டும். அனைத்து இனங்களும் மதங்களும் பரஸ்பர மரியாதையுடனும் நல்லிணக்கத்துடனும் வாழும் இம்மாவட்டத்தை பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும்.
மேலும், கன்னியா வெந்நீர் ஊற்று தொடர்பான வரலாற்று மற்றும் தொல்லியல் உண்மைகள் குறித்து வெளிப்படையான விளக்கத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்க வேண்டும் என்றும், எந்தவொரு அபிவிருத்தி அல்லது கட்டுமான நடவடிக்கைகளும் சட்ட நடைமுறைகள், நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் அனைத்து சமூகங்களின் மத, பண்பாட்டு உணர்வுகளை மதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் மிக ஒற்றுமையாக வாழ்ந்து வரும் மாவட்டத்திற்குள் ஒரு இன முறுகலை ஏற்படுத்த முனைய வேண்டாம். குறிப்பாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக உள்ள அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விவகாரத்திற்கு எவ்வாறான நடவடிக்கையினை எடுக்கப்போகின்றார்கள்? என்ற கேள்வியை எழுப்பினார்.




