கல்முனை மாநகரம் என்பது முஸ்லிம் சமூகத்தின் ஒரு அடையாளம் என்பதை தமிழ் தேசியம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பிரதித் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை (31) இரவு அவரது கல்முனை பகுதியில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டு செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கல்முனை மாநகரம் என்பது முஸ்லிம் சமூகத்தின் ஒரு அடையாளம், ஒரு முக வெற்றிலை என்பதை தமிழ் தேசியம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.குறிப்பாக நாங்கள் இந்த நாட்டின் தென்பகுதி சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தை எவ்வாறு தமிழ் தேசியத்தின் முக வெற்றிலை அடையாளமாக பார்க்கிறோமோ அதே போன்று தான் கல்முனை மாநகரம் என்பது முஸ்லிம்களின் தேசியத்தின் அடையாளத்தின் குறி அல்லது முக வெற்றிலை. இது பெருந்தலைவர் அஸ்ரப் அவர்களினால் பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு விடயம். எனவே இப்பிராந்தியத்தில் இருந்து கடந்த காலத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி என்ற அடிப்படையில் தலைவரது கொள்கையில் இருந்து ஒரு அடி கூட எம்மால் விலக முடியாது.
இது சம்பந்தமாக நீதிமன்ற வழக்கு வந்த போதும் கூட நாங்கள் மிக காட்டமாக அதை எதிர்கொள்வதற்கு தயாரானோம். உண்மையில் 1989 ஆண்டு அன்றைய காலகட்டத்தில் இருந்த ஆயுத சூழ்நிலையில் வாக்குகளை எடுக்க வேண்டும் என்ற நப்பாசை காரணமாக அன்று ஒரு அவசியமற்ற இவ்விடயத்தை அன்றிருந்த பிரதிநிதிகள் செய்தனர். இதன் காரணமாக முஸ்லீம் சமூகமும் தமிழ் சமூகமும் இன்று இன்னல்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறான ஒரு தவறினை நாங்கள் உட்பட கல்முனை பகுதியைச் சேர்ந்த எமது சமூக பிரதிநிதிகள் 1989 ஆண்டு விட்ட தவறினை செய்வதற்கு தயாரில்லை என்பதை இவ்விடத்தில் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
மேலும் கல்முனை உப பிரதேச செயலகம் சம்பந்தமாக அதனை தரமுயர்த்தக்கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் அவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கில் 2023 ஆண்டு மே மாதத்தில் ஒரு இடைக்கால தீர்ப்பு வழங்கப்படவிருந்தது. இச் சந்தர்ப்பத்தில் நாங்கள் இடையீட்டு மனு ஒன்றினை குறுகிய காலத்தில் தாக்கல் செய்திருந்தோம். அதில் நானும், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.கலீலுர் ரஹ்மானும் இடையீட்டு மனுதாரர்களாக மாறி இறுதியாக இடைக்கால தீர்ப்பு 23-11-24 ஆம் திகதி வந்தது.
அந்த தீர்ப்பின் படி பிரதேச செயலகத்தை தரமுயர்த்தல் மற்றும் கணக்காளர் நியமித்தல் உட்பட பல கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டது. தற்போது இறுதி கட்டத்தை நோக்கி இவ்வழக்கு நெருங்கியுள்ளது. எதிர்வரும் ஜூலை 28 ஆம் திகதி இவ்வழக்குடன் இணைந்து மேலும் 2 வழக்குகளும் சேர்ந்து 3 வழக்குகளுக்கான விசாரணைகள் அதற்கான தீர்ப்புகள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட உள்ளது. இந்த இடத்தில் நாங்கள் ஒன்றை சொல்ல விரும்புகின்றோம். கடந்த மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் ஜனாதிபதி அவர்கள் தெளிவாக கூறி இருக்கிறார்கள்.
அதாவது இன அடிப்படையில் பிரதேச செயலகமோ அல்லது நகர சபைகளோ உருவாவது எங்கள் ஆட்சி கொள்கை அல்ல. எனவே நாங்கள் குறிப்பாக கல்முனை வாழ் தமிழ் மக்களிடம் தமிழரசுக் கட்சி செயலாளர் ம.சுமந்திரன் அவர்களிடம் வேண்டுகோள் ஒன்றினை முன் வைக்க விரும்புகின்றோம்.கல்முனை பிரதேசமானது தொன்று தொட்டு ஒன்றாக இரு இனங்களும் ஒன்றாக வாழ்கின்ற பிராந்தியம்.ஒரு குறிப்பிட்ட கிலோமீற்றரில் இரு சமூகமும் வாழ்ந்து கொண்டிருக்கும் போது இந்த நிர்வாக நடவடிக்கைகளை இனத்துவ அடிப்படையில் முஸ்லீம் தமிழ் என்று இவ்விடயங்களை கையாளாமல் இப்போது குறித்த வழக்கிற்கு அப்பால் இவ்விடயத்தை இவ்வரசியல் தலைமைகள் தமிழ் முஸ்லிம் சிவில் சமூகங்களுடன் பேசி எல்லோரும் ஒற்றுமையாக வாழக்கூடிய தீர்வினை உருவாக்க எல்லோரும் முன்வர வேண்டும் என இந்த இடத்தில் கூறிக் கொள்ள விரும்புகிறேன் என்றார்.
-பாரூக் ஷிஹான்-




