கண்டி-யாழ்ப்பாணம் ஏ9 வீதியில், கெக்கிராவ-தோணிகலப் பகுதியில் நேற்று முன்தினம் (25) இரவு நிகழ்ந்த ஒரு பயங்கர வீதி விபத்தில், வீதியைக் கடந்து சென்ற காட்டு யானை ஒன்று படுகாயம் அடைந்ததுடன், வாடகைக் காரும் சேதமடைந்ததாக மரடன்கடவல பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கெக்கிராவவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த வாடகைக் கார், வீதியைக் கடக்க முயன்ற காட்டு யானையின் மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்து நடந்த சமயத்தில், இரண்டு காட்டு யானைகள் வீதியைக் கடக்க முயன்றதாகவும், அவற்றுள் ஒன்றுlன் வாடகைக் கார் மோதியதாகவும் பொலிசார் கூறுகின்றனர்.
ஏ 9 பிரதான வீதியில் உள்ள 97-வது மற்றும் 98-வது தூண்களுக்கு இடையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் வாடகைக் கார் கடுமையாக சேதமடைந்துள்ளது என்றும், அதில் பயணித்த யாழ்ப்பாணம், உடுவிலைச் சேர்ந்த கிருஷ்ண குமாரன் பிரசந்தன் மற்றும் புளியங்குளத்தை சேர்ந்த நாகேந்திரன் பிருந்துஷன் ஆகிய இருவருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
காயமடைந்த காட்டு யானை, ஒரு வீட்டின் பின்புறம் கிடந்த நிலையில், கணேவல்பொல வனவிலங்கு அலுவலக உத்தியோகத்தர்களால் கவலைக்கிடமான நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு வனவிலங்கு அதிகாரி தெரிவித்தார்.
மரடன்கடவல பொலிஸார் மற்றும் கணேவல்பொல வனவிலங்கு அலுவலகம் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணையைத் தொடங்கியுள்ளன.




