இறப்புக்கு ஆதாரமாக வங்கிக்கு சகோதரியின் எலும்புக் கூட்டுடன் வந்த நபர்

Date:

ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தை சேர்ந்த, வயதான பழங்குடியின நபர் ஒருவர், தனது இறந்த சகோதரியின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை எடுப்பதற்காக, நேற்று (ஏப்.27) அவரின் எலும்புக் கூட்டையே தோண்டியெடுத்து வங்கிக்கு கொண்டுவந்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

கியோஞ்சரின் பட்னா வட்டாரத்தில் உள்ள மாலிபாசி பகுதியைச் சேர்ந்த ஜிது முண்டா (55) என்ற பழங்குடியின நபர், இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்த தனது சகோதரி கலரா முண்டாவின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.20,000-ஐ எடுக்க பட்னா வட்டாரத்தில் உள்ள ஒடிசா கிராமீன் வங்கியின் மாலிபாசி கிளையை அணுகினார். வங்கி அதிகாரிகள், வங்கிக் கணக்கு உள்ள நபரையோ அல்லது அவர் உயிரிழந்தது தொடர்பான ஆவணங்களையோ சமர்ப்பிக்குமாறு அவரிடம் கேட்டுக் கொண்டனர்.

இது குறித்த புரிதல் இல்லாத அந்த நபர், கல்லறையை தோண்டி உயிரிழந்த தனது சகோதரியின் எலும்புக் கூட்டை வங்கிக்கே எடுத்து வந்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “நான் பலமுறை வங்கிக்கு அலைந்து திரிந்தேன். ஆனால், அவரது பெயரில் வைப்புத் தொகையாக உள்ள பணத்தை எடுக்க வேண்டுமென்றால், கணக்கு வைத்திருப்பவரை அழைத்து வருமாறு அங்கிருந்தவர்கள் என்னிடம் கூறினர். அவர் இறந்துவிட்டார் என்று நான் அவர்களிடம் கூறினேன். அவர்கள் பிடிவாதமாக ஆதாரம், ஆவணம் கேட்டனர்.

எனவே, விரக்தியின் காரணமாக, நான் அவரது கல்லறையைத் தோண்டி, இறந்துவிட்டார் என்பதற்குச் ஆதாரமாக அவரது எலும்புக் கூட்டை எடுத்து வந்தேன்” என்று ஜிது முண்டா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பட்னா காவல் நிலைய ஆய்வாளர் கிரண் பிரசாத் சாஹு பேசுகையில், “ஜிது முண்டா ஒரு கல்வியறிவு பெறாத பழங்குடியின நபர். சட்டப்பூர்வ வாரிசு மற்றும் நியமனதாரர் என்றால் என்னவென்று அவருக்குத் தெரியாது. இறந்த ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான நடைமுறையை அவருக்குப் புரிய வைப்பதில் வங்கி அதிகாரிகள் தவறிவிட்டனர்” என்று தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் நாடும் முழுவதும் அதிர்ச்சியை உருவாக்கியதை தொடர்ந்து பேசிய உள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) மனஸ் தண்ட்பத், “இன்றுதான் எனக்கு இந்தச் சம்பவம் குறித்துத் தெரியவந்தது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க என்ன செய்ய முடியும் என்பதை நாங்கள் ஆராய்வோம்” என்று கூறினார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, காவல் துறையினர் தலையிட்டு, அந்தப் பழங்குடியினரின் மறைந்த சகோதரியின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்குத் தாங்களே ஏற்பாடு செய்து தருவதாக அவருக்கு உறுதியளித்தனர். இதன் பின்னர் ஜிதுவின் சகோதரியின் எலும்புக் கூட்டு எச்சங்கள் காவல் துறையினரின் மேற்பார்வையின் கீழ் அடக்கம் செய்யப்பட்டன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

19 பிக்குகள் போதைப்பொருள் பாவித்தது உறுதி

சுமார் 112 கிலோகிராம் குஷ் மற்றும் ஹாஷ் ரக போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க...

அல்லைப்பிட்டி சிறுவர் ஆற்றல் மையம் தீயில் எரிந்தது!

அல்லைப்பிட்டியில் இயங்கிவரும் "தபோவனம்" சிறுவர் ஆற்றல் மையம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. விசமிகளால்...

இலங்கை தபால் திணைக்களம் அமெரிக்காவுக்கு அனுப்பிய 625,000 டொலர் பணமும் மாயம்!

இலங்கையிலிருந்து அமெரிக்க தபால் சேவைக்கு அனுப்பப்பட்ட 625,000 டொலர் பணம் தங்களுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்