உயர் நீதிமன்ற உத்தரவின்படி எட்டு மாதங்களுக்கு பின்னர் இன்று இடம்பெற்ற மாநகரசபையின் அமர்வில் குழப்பநிலை ஏற்ப்பட்டது.
வவுனியா மாநகரசபையின் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாட்டிற்கு இடைக்கால தடைஉத்தரவை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியிருந்தது. சபை உறுப்பினர்கள் இருவர் தாக்கல்செய்த வழக்கின் அடிப்படையில் அந்த உத்தரவு வழங்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த வழக்கு இன்னும் முடிவடையாத போதும் சபை மீது விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்கி உயர்நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இதனையடுத்து எட்டுமாதங்களாக முடக்கப்பட்டிருந்த சபையின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன் சபையின் அமர்வு முதல்வர் சு.காண்டீபன் தலைமையில் இன்று இடம்பெற்றது.
இதன்போது முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளமையால் அவர் தலைமையில் இக்கூட்டத்தை நடத்த அனுமதிக்க மாட்டோம் எனவே இதனை குழுநிலை விவாதமாக முன்னெடுக்குமாறு எதிர்தரப்பு உறுப்பினர்கள் கோரினர். இதனால் சபையில் ஆளும் எதிர்த்தரப்பு உறுப்பினர்களிற்கிடையில் கடும் வாக்குவாதம் ஏற்ப்பட்டு குழப்பத்துடன் சபை ஒத்திவைக்கப்பட்டது.
முதல்வர் மீது ஊழல்குற்றச்சாட்டு உள்ளமையால் அவர் பதவி விலகவேண்டும். அவர் தலைமையில் சபை கூட்டத்தை நடாத்தவிடமாட்டோம். பதில் முதல்வர் ஒருவரை தெரியுங்கள். அல்லது இந்தக்கூட்டத்தினை குழுநிலை விவாதமாக நடாத்துங்கள். அத்துடன் மாநகரசபையின் அடிப்படை கட்டளைச்சட்டங்கள் மீறப்பட்டுள்ளது. பல வேலைத்திட்டங்கள் கட்டளை சட்டத்திற்கு அப்பாற்ப்பட்டு இடம்பெற்றுள்ளது. என எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
விசாரணை அறிக்கையானது சட்டரீதியாக வெளிவரும் வரை சபையை குழப்பவேண்டாம். வர்த்தமானியில் அது இன்னும் வெளியிடப்படவில்லை. முதல்வர் குற்றவாளி என்றால் அவரது பதவியினை ஆளுநர் இடை நிறுத்தியிருக்கலாமே. ஏன் அவ்வாறு இதுவரை நடக்கவில்லையென ஆளுந்தரப்பினர் சுட்டிக்காட்டிய போதும், எதிர்த்தரப்பினர் கூட்டத்தை குழப்புவதையே குறியாக கொண்டிருந்தனர்.
இதனால் சபை ஒத்திவைக்கப்பட்டது.




