மட்டு கொக்கட்டிச்சோலை முனைக்காடு குடியிருப்பு பிரதேசத்திற்குள் நுழைந்த காட்டு யானை ஒன்று தாக்கியதில் 74 வயதுடைய வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றை உடைத்து சேதமாக்கிய சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (27) காலையில் இடம்பெற்றுள்ளது. அதேவேளை பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் இன்று வரை யானை தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
முனைக்காடு மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த 74 வயதுடைய கதிர்காமத்தம்பி சிவபாக்கியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொக்கட்டிச்சோலை முனைக்காடு குடியிருப்பு பகுதிக்குள் சம்பவ தினமான இன்று காலை காட்டு யானை ஒன்று ஊடுருவி தாக்குதல் நடத்தியதில் 74 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளதுடன். 44 வயதுடைய அருள்சிவம் கோமதி, மற்றும் 62 வயதுடைய ஞானசீலன் அருளம்மா ஆகிய இரு பெண்கள் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை யானை வீடு ஒன்றை உடைத்து சேதமாக்கிய அட்டகாசம் புரிந்து வருவதையடுத்து அந்த பகுதி மக்கள் பெரும் பீதியடைந்துள்ளதையடுத்து குடியிருப்பு பகுதியில் இருந்து யானையை வெளியேற்றும் நடவடிக்கையை வனவிலங்கு அதிகாரிகள் பொலிசார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் நகர் பகுதி மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் தற்போது காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக ஊடுருவி தாக்குதல் மேற்கொண்டு வருகின்றது இதனையடுத்து மாவட்ட மக்கள் பெரும் பய பீதியடைந்துள்ளதுடன் கடந்த 13 ம் திகதி வாழைச்சேனை நகருக்குள் யானைகள் ஊடுருவி தாக்குதலில் இருவர் உயிரிழந்ததுடன் 4 பேர் படுகாயமடைந்தனர் இதனை தொடர்ந்து இன்று கொக்கட்டிச்சோலை முனைக்காடு பகுதியில் குடிமனைக்குள் புகுந்த யானை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-கனகராசா சரவணன்-



