தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய நிலையில், நடிகர் அஜித் குமார் முதல் ஆளாகத் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு காலை 6:40 மணிக்கே நடிகர் அஜித் தனது மனைவியுடன் வருகை தந்தார். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காகவும், ரசிகர்களின் கூட்டத்தைத் தவிர்க்கவும் அவர் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அங்கு வந்து காத்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
சரியாக 7 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கியதும், முதல் வாக்காளராக அவர் தனது ஜனநாயக கடமையைச் செய்து முடித்தார்.
வாக்களித்த பின் தனது விரலில் வைக்கப்பட்ட மை அடையாளத்தைக் காட்டிய அவர், செய்தியாளர்களிடம் ஏதும் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
அஜித் வருகையை ஒட்டி அந்தப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவரைத் தொடர்ந்து மற்ற திரை நட்சத்திரங்களும், அரசியல் தலைவர்களும் தங்களது பகுதிகளில் காலை முதலே வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று நடைபெறுகிறது. 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 14.59 லட்சம் பேர் முதல்முறை வாக்காளர்கள்.
தமிழகம் முழுவதும் 249 மாதிரி வாக்குச்சாவடிகள், 325 அனைத்து மகளிர் வாக்குச்சாவடிகள், 71 மாற்றுத் திறனாளிகள் பணியாற்றும் வாக்குச்சாவடிகள், 79 இளம் பணியாளர்கள் பணியாற்றும் வாக்குச்சாவடிகள் என மொத்தம் 33,211 இடங்களில் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு நுண்பார்வையாளர்கள், துப்பாக்கிய ஏந்திய போலீஸார் அல்லது துணை ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீர், கழிவறை, தடையற்ற மின்சாரம், அவசர மருத்துவம், கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம், மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி, நிழற்பந்தல், வாக்காளர்களுக்கு உதவ தன்னார்வலர்கள் ஏற்பாடு என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.



