இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், இன்று (23) வடக்கு – கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் மலையக அரசியல் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்த சந்திப்புகள் கொழும்பு இந்திய இல்லத்தில் இடம்பெற்றன.
வடக்கு கிழக்கு தமிழ் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் சீ.வீ.கே.சிவஞானம், சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு முழுமையான உதவிகள் சென்றடைய வேண்டியதை தமிழ் தரப்பு வலியுறுத்தியது.
13வது திருதத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, மாகாணசபை தேர்தலை நடத்தவும் வலியுறுத்தினர்.
பலாலி விமான நிலையத்தை விஸ்தரிக்காமல், ஓடுபாதையை விஸ்தரித்து விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டுமென வலியுறுத்தினர். காங்கேசன்துறை துறைமுக விரிவாக்கத்தையும் வலியுறுத்தினர். துறைமுக விரிவாக்கம் தொடர்பில் இந்திய தூதர் செயற்பட்டு வருவதாக ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இதேவேளை, மலையக தமிழ் பிரதிநிதிகளையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்தித்தார். தமிழ் முற்போக்கு கூட்டணியின் மனோ கணேசன், பழனி திகாம்பரம், வே.இராதாகிருஷ்ணன், இலஙகை தொழிலாளர் காங்கிரசின் செந்தில் தொண்டமான், ஜீவன் தொண்டமான், மருதபாண்டி ரமேஸ் ஆகியோர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.



