வலிவடக்கு என்ற பிரதேசம் எங்கு இதுக்கின்றது என்றோ அங்கு வாழும் மக்களின் பிரச்சினைகள் எத்தகைய வலிமை மிக்கது என்றோ ஜனாதிபதி செயலகத்துக்கு தெரியாதிருப்பது எமது பிரதேச அரச அதிகாரிகளின் அசமந்தமும் அரசில்வாதிகளின் இயலாமையுமே காரணம் என மயிலிட்டி மீள் குடியேற்ற சங்க தலைவர் யோசப் அல்பேர்ட் அலோசியஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இராணுவத்தின் பிடியிலுள்ள வலி வடக்கு காணிகளை விடுவிக்கக்கோரி, காணிகளை இழந்த வலி வடக்கு மக்களினால் ஊடக சந்திப்பு ஒன்று இன்று தனியார் விடுதியில் நடைபெற்றது.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்..
குறித்த காணி விவகாரம் தொடர்பில் கொழும்பில் அடையாளப் போராட்டம் ஒன்றை நடத்தி ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்றிருந்தோம்.
இது தொடர்பில் ஜனாதிபதி செயலகதில் கலந்துரையாடிய போது அங்கு நாம் கொடுத்த கோரிக்கைகள் எவைவும் ஆவணங்களாக இருக்கவில்லை.
இதனால் அந்த அதிகாரிகள் எமக்கு பிரச்சினை இருப்பதாக எண்ணாத நிலைமையே இருந்தது.
குறிப்பாக எமது நிலங்களை எம்மிடம் வழங்குங்கள் என்ற
ஒரு கடிதம் மட்டுமே ஜனாதிபதி செயலகத்தில் இருந்தது.
அவ்வாறாயின் எமது கோரிக்கைகள் எல்லாம் எங்கு சென்றன இதற்கு யார் பொறுப்பு என்று கேள்வி எழுப்பிய அவர். இனியாவது எமது பிரச்சினைக்கு தீர்வை தர ஜனாதிபதி அக்கறை செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.



