சீனா அதன் சட்டபூர்வ உரிமைகளையும், நலன்களையும் பாதுகாப்பதில் உறுதியாய் இருப்பதாக அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
கூடுதலாக 50 வீத வரி விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்திருக்கும் வேளையில் சீனா இவ்வாறு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா செய்வது பொருளாதாரத் துன்புறுத்தல் என்று சீனா சாடியது.
சென்ற வாரம் அமெரிக்கா, சீனாவுக்குப் புதிதாக 34 வீத வரி அறிவித்தது. பதிலுக்குச் சீனாவும் அமெரிக்காவுக்கு 34 வீத வரி விதித்தது.
சீனா அந்த வரியை நீக்க வேண்டுமென ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது பழிவாங்கல் வரியென விபரித்தார். ஏப்ரல் 8ஆம் திகதிக்குள் வரியை நீக்காவிட்டால் ஏப்ரல் 9ஆம் திகதி முதல் சீன பொருட்கள் மீது கூடுதலாக 50 வீத வரி விதிக்கப்படுமென எச்சரித்தார்.
அத்துடன், வரி விவகாரம் தொடர்பில் இருநாட்டு பேச்சையும் நிறுத்தப் போவதாக மிரட்டியிருந்தார்.
வரி விதிப்பு குறித்து அச்சுறுத்திக் கொண்டே சீனாவுடன் உரையாட முயல்வது சரியான வழியல்ல என்று அமெரிக்காவுக்கான சீனத் தூதரகப் பேச்சாளர் லியூ பெங்யூ கூறினார்.




