இந்திய இலங்கை அதானி கிரீன் எனர்ஜி காற்றாலை திட்டம் முற்றிலுமாக நிறைவடையாமல் உள்ளதான அறிகுறிகள் வெளிவருவதாக ஊடகங்கள் தெரிவித்துவருகின்றன.
இலங்கையில் செயற்படுத்தவிருந்த காற்றாலை மின் திட்டத்திலிருந்து தமது நிறுவனம் வெளியேறுவதாக இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானி நிறுவிய தானி கிரீன் எனர்ஜி நிர்வாகம் நேற்று (13) அறிவித்திருந்தது.
எனினும், அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர், இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்கள் அடுத்த வாரம் மேலும் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளதாக டெய்லி மிரர் தகவல் வெளியிட்டுள்ளது.
இது குறித்த ஒப்பந்தம் முற்றிலுமாக நிறைவடையாமல் இருக்கக்கூடும் என்பதற்கான அறிகுறியாக கருதப்படுகிறது.
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக இலங்கையும் இந்தியாவும் முந்தைய அரசாங்கத்துடன் ஏற்கனவே 14 சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி முடித்துள்ள நிலையில், அனுமதிகள் பெறுவதில் ஏற்பட்ட தாமதம் இந்திய தரப்பில் விரக்தியை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
பெரும்பாலான ஒப்புதல்களை பெற்றிருந்தாலும், மன்னார் சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் உயர் நீதிமன்ற வழக்கு போன்ற சில தீர்க்கப்படாத பிரச்சினைகள் காரணமாக, அதானி நிறுவனம் திட்டத்திலிருந்து வெளியேற முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதனை தொடர்ந்து, குறித்த திட்டம் தொடர்பில், அடுத்த வாரம் மேலும் பேச்சுவார்த்தை ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



