கிழக்கு மாகாணத்தில் உள்ள 3,500க்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நிதி அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
அனுமதி கிடைத்ததும், போட்டிப் பரீட்சை மூலம் வேலையில்லா பட்டதாரிகளை தேர்வு செய்து இந்த வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (13) மட்டக்களப்பு பழைய கச்சேரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வின் போது, வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் ஆளுநரை சந்தித்து, அரசு நியமனம் கோரிய மகஜரை ஜனாதிபதியிடம் வழங்குமாறு அவரிடம் கையளித்திருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த ஆளுநர், “கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் வேலையில்லா பட்டதாரிகள் இருக்கின்றனர். அதேவேளை, நிதி அமைச்சர் அனுமதியளித்த 375 பட்டதாரிகளுக்கு முன்பு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. பகுதி பகுதியாக, அனைவருக்கும் நியமனங்களை அவசரமாக வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம். உங்கள் கோரிக்கை அடங்கிய மகஜரை ஜனாதிபதியிடம் கையளிப்போம்” என கூறினார்.
இதன் மூலம், கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் விரைவில் தீர்வு காணக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.



