பிரபல எல்ல சுற்றுலா நகரத்திற்கு அருகிலுள்ள மலைத்தொடர் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ இன்று (14) காலை 20 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 10 ஏக்கர் வனப்பகுதி ஏற்கனவே தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) உறுதி செய்துள்ளது.
எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராவணா எல்ல வனப்பகுதியில் நேற்று (13) மாலை 4.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தீ வேண்டுமென்றே யாரோ ஒருவரால் மூட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கடந்த ஆண்டும் சுமார் 15 பாடசாலை மாணவர்கள் கொண்ட குழு இதே பகுதியின் ஒரு பகுதிக்கு தீ வைத்திருந்ததோடு, நீதிமன்றம் அவர்களை அப் பகுதிகளில் மரங்களை நாட்ட உத்தரவிட்டிருந்தது.
நிலவும் வறண்ட வானிலை, பலத்த காற்று மற்றும் செங்குத்தான நிலப்பரப்பு ஆகியவை தீ வேகமாக பரவுவதற்குக் காரணமாகி, எல்லா மலைத்தொடர் முழுவதும் தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், பண்டாரவளை வனப் பாதுகாப்பு அதிகாரிகள், எல்ல பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் தியத்தலாவை விமானப்படை மற்றும் இராணுவத்தினர் தீயை கட்டுப்படுத்த தீவிரமாக போராடி வருகின்றனர்.
தீயணைக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்த, இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிக்கொப்டர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், எல்ல-வெல்லவாய பிரதான வீதிக்கு தீ பரவாமல் தடுப்பதற்காக பண்டாரவளை மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தற்போது நிலவும் நிலைமையின் அடிப்படையில், தீ விரைவில் கட்டுப்பாட்டுக்குள் வருமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அதிகாரிகள் தீயை கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துவருகின்றனர்.