தென் கொரியாவில் உள்ள ஆரம்பப் பள்ளியில் பரபரப்பை ஏற்படுத்திய கொலைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
8 வயது சிறுமியொருவரை அவரது ஆசிரியையே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சம்பவம் நேற்றைய தினம் உள்ளூர் நேரப்படி மாலை 6 மணியளவில் பள்ளிக்குள் அமைந்துள்ள கட்டடம் ஒன்றின் இரண்டாவது மாடியில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த இடத்தில் பலத்த காயங்களுடன் அந்த சிறுமி மீட்கப்பட்டு உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை வழங்கப்பட்டிருந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்ததாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பாக 40 வயதுடைய பெண் ஆசிரியை ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணையின் போது குறித்த ஆசிரியை தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தென் கொரிய இடைக்கால ஜனாதிபதி உடனடியாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதுடன், விசாரணைகளை விரைவுபடுத்த வேண்டும் எனவும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த கொடூரச் சம்பவத்தால் பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டு,இக் கொலை சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.