சீனாவின் தென்மேற்கிலுள்ள ஸிசூவான் மாகாணத்தில் இன்று (08) காலை திடீரென ஏற்பட்ட மண்சரிவின் காரணமாக 10க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளதாகவும், இந்த அனர்த்தத்தால் 30க்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், சீனாவின் அவசரக்கால மேலாண்மை அமைச்சின் ஒருங்கிணைப்பில் நூற்றுக்கணக்கான மீட்புப் படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, மண்ணுக்குள் புதைந்தவர்களை கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளதோடு, இதுவரை 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் தனது அனுதாபத்தை தெரிவித்ததோடு, காணாமல் போனவர்களை விரைவாக தேடித் தேடுமாறு அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார். அதேசமயம், சீன பிரதமர் லி கியாங், மண்சரிவுக்கு உள்ளான பகுதிகளின் புவியியல் தன்மையை உடனடியாக ஆய்வு செய்யுமாறும், ஆபத்தான இடங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
தற்போது, காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேலும் வலுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.



