மட்டக்களப்பில் விவசாயிகள் அறுவடை தடை செய்த அமைப்புகளை கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியுள்ளனர்.
மட்டக்களப்பில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அறுவடைக்கு தயாரான நெல் வயல்கள் சில அமைப்புகளின் பிரச்னைகளால் அறுவடை செய்ய முடியாமல் இருந்ததாக விவசாயிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வயல் நிலங்கள் சமீபத்திய கனமழையால் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன. இதனால் தமக்கு பல்வேறு நஷ்டங்கள் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
2024-2025 பெரும்போக வேளாண்மை தொடர்பான கூட்டத்தில், நெல் அறுவடை 20ம் திகதிக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், கடந்த 10 நாட்களுக்கு முன்பே அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த நெல் வயல்களை தடுக்க சில அமைப்புகள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மழை தொடர்பான எச்சரிக்கையின்படி விவசாயிகள் அறுவடை செய்ய முனைந்த நிலையில், சிலர் அதை தடுத்திருந்தனர். தற்போது அதன் விளைவாக வெள்ளம் மற்றும் பூச்சி தாக்கத்தால் வயல் நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல் முழுமையாக முளைத்ததால் உணவிற்கும், வியாபாரத்திற்கும் பயன்பட முடியாத நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் பொருளாதார பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
“விவசாயத்தை பற்றி அறியாத சிலர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததன் விளைவாகவே இந்த நஷ்டம் ஏற்பட்டது. இவர்கள் நாங்கள் சந்தித்த நஷ்டத்திற்கு பொறுப்பேற்று ஈடு செய்ய வேண்டும்,” என ஆதங்கத்துடன் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் அரசாங்கத்திடம், அறுவடை தடை செய்தவர்களிடம் நேரடியாக நஷ்ட ஈடு பெற வழி செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசாங்க அதிபர் மழைக்கு முன்பே அறுவடை செய்யுமாறு அறிவித்த போதிலும், சிலரின் தலையீட்டால் அதை செயல்படுத்த முடியவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் முழுமையாக அழிவடைந்துள்ளன.
இதை கருத்தில் கொண்டு, விவசாயிகள் இழப்பீடு பெறுவதற்கான உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற சிக்கல்களை தவிர்க்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர்.




