இலங்கை தமிழ் அரசு கட்சியின் குழுவொன்று, நேற்று முன்தினம் (7) யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தனர்.
கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதன், அவரது மாமியாரும் கடந்த பாராளுமன்ற தேர்தல் வேட்பாளருமான சசிகலா ரவிராஜ், புதிய சுதந்திரன் பத்திரிகைக்கு நிதியளிக்கும் மு.அகிலன் உள்ளிட்ட ஒரு குழுவினர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
கிட்டத்தட்ட இலங்கை தமிழரசு கட்சியின் ஒதுக்கப்பட்டவர்கள் அணியாகவே இது காணப்பட்டது.
இந்த சந்திப்பில் கலந்து கொண்ட ஒருவர் ரணிலிடம் சங்கடமான கேள்வியொன்றை எழுப்பினார்.
முன்னர் யாழ்ப்பாணத்தின் தீவகம் ஈ.பி.டி.பி துணை ஆயுதக்குழுவின் கட்டுப்பாட்டில் இருந்தது. அங்கு பிற அரசியல் கட்சிகள் நுழைந்தபோது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஒருமுறை ரணில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, யாழ்ப்பாணம் தீவகத்திற்கு லாண்ட் மாஸ்டர் வாகனத்தில் சென்றார். அந்த பயணத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஈ.பி.டி.பி குண்டர்கள் தாக்குதலில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய இளைஞன் ஒருவர், உங்களை தாக்கியவர்களின் ஆதரவை இப்பொழுது பெற்றுள்ளீர்களே?, இது முரண்நகையாக இல்லையா என கேள்வியெழுப்பினார்.
இதற்கு சிரிப்புடன் பதிலளித்த ஜனாதிபதி, அது தனக்கு தெரியும் என்றும், தற்போது தான் தனியொருவராக பாராளுமன்றம் வந்துள்ளதாகவும், பாராளுமன்ற பெரும்பான்மையை பெற பல தரப்பின் ஆதரவு கிடைத்ததாகவும், எதிர்காலத்தில் பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றியீட்டுவேன் என தெரிவித்ததாக சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தனர்.




