ரஷ்ய போரில் ஈடுபட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண இலங்கை மற்றும் ரஷ்ய அதிகாரிகளை உள்ளடக்கிய கூட்டு செயற்குழுவொன்றை நிறுவ இலங்கை முன்மொழிந்துள்ளது.
வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய இன்று ரஷ்யாவில் உள்ள பிரதி அமைச்சர் அந்திரேய் ருடென்கோ மற்றும் பிரதி பாதுகாப்பு அமைச்சர் கேர்ணல் ஜெனரல் ஏ.வி.போமின் ஆகியோரை சந்தித்த போதே இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் பாலசூரிய தலைமையிலான உயர்மட்ட தூதுக்குழு ஜூன் 26 முதல் 27 வரை ரஷ்ய கூட்டமைப்பிற்கு விஜயம் செய்தது, அங்கு இரு நாடுகளும் ரஷ்ய ஆயுதப் படைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இலங்கையர்களை ஒப்பந்த அடிப்படையில் திருப்பி அனுப்பும் முயற்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபட ஒப்புக்கொண்டன.
போரில் கொல்லப்பட்ட 17 இலங்கையர்கள், உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குதல், தொடர்பு கொள்ள முடியாத இலங்கையர்களின் அவல நிலை, தானாக முன்வந்து நாடு திரும்புவதற்கான சாத்தியம், ஒப்பந்தங்களை முன்கூட்டியே நிறுத்துதல் மற்றும் ஊதியத்தை முறைப்படுத்துதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.




