இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு கட்சிகள் ஆயத்தமாகி வரும் நிலையில், நடந்து முடிந்த இந்திய தேர்தலில் இதேபோன்ற கருத்துக் கணிப்பை நடத்தி நரேந்திர மோடியின் வெற்றியை முன்னறிவித்த சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனம், இலங்கையில் அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்கள் குறித்தும் விரிவான மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அமெரிக்கர்களால் நடத்தப்படும் இந்த நிறுவனம் சில நிறுவனங்களால் இங்கு அழைக்கப்பட்டு இலங்கையில் சுமார் 9.3 மில்லியன் பிரஜைகளின் சமூக ஊடக கணக்குகளை ஆய்வு செய்து அவர்களின் கணக்கெடுப்பை நடத்தத் தொடங்கியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் வரவிருக்கும் தேர்தல் அலைகளை ஆய்வு செய்வதற்காக நிறுவனம் முதலில் அழைக்கப்பட்ட நிலையில், அவர்கள் மூன்று மாதங்களுக்கு சமூக ஊடகப் போக்குகளை ஆய்வு செய்து, தற்போது மூன்று முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்களின் – ரணில் விக்கிரமசிங்க , அனுரகுமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச- சதவீத மாற்றங்கள் குறித்து அதிகாரிகளுக்கு ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் புதுப்பிப்புகளை வழங்குகிறார்கள்.
நேற்று சமர்பிக்கப்பட்ட அதன் சமீபத்திய அறிக்கையில், மக்களின் ஆதரவு மூன்று வேட்பாளர்களுக்கிடையே ஏறத்தாள சமமாக இருக்கும் என்று கணித்துள்ளது. இந்த கணிப்பின்படி மூவரில் யாருமே 25 சதவீதத்தை கூட எட்டவில்லை. விக்கிரமசிங்க, அனுர குமார மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய மூவரும் சராசரியாக 21 மற்றும் 22 வீத வாக்குகளை பேணிவருகின்ற அதேவேளை, தீர்மானிக்கப்படாத வாக்காளர்கள் 35 வீதத்திற்கு மேல் பட்டியலிடப்பட்டுள்ளனர். அதாவது, தற்போது முடிவெடுக்காத வாக்காளர்கள்தான் இறுதி வெற்றியாளரை தீர்மானிக்கவுள்ளனர்.
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம், X இல் உள்ள போக்குகளை கணிப்பதன் மூலமும், பொதுக் கருத்துகளை கணிப்பதன் மூலமும் கணிப்புகள் செய்யப்பட்டுள்ளன.
இதே நிறுவனம் இந்தியத் தேர்தலில் பாஜகவின் வெற்றியை சரியாகக் கணித்துள்ளது. மோடி மகத்தான வெற்றிபெற மாட்டார் என்று துல்லியமாக கணித்திருந்தது. ஆனால் முக்கிய இந்திய ஊடகங்கள் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார் என்று செய்தி வெளியிட்டன.
அண்மையை ஆய்வுகளின்படி ஏப்ரலில், மூன்று முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்களில் எவரும் 50 சதவீத வாக்குத் தளத்தைப் பெறவில்லை என்றும் பெரும்பாலான வாக்காளர்கள் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது குறித்து முடிவெடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தது.




