யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் இராணுவ வாகனம் மோதி யுவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதான இராணுவச்சிப்பாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று (20) காலை 10 மணியளவில் புத்தூர்- மீசாலை வீதியில், வீரவாணி சந்தியில் இந்த விபத்து நடந்தது.
சுதாகரன் சாருஜா (23) என்ற யுவதியே உயிரிழந்தார். அவரது பிறந்தநாள் இன்றாகும்.
வாதரவத்தையில் வசிக்கும் யுவதியின் குடும்பத்தினர் மாடும் வளர்க்கிறார்கள். வளர்ப்பு மாட்டில் கறக்கப்பட்ட பாலுடன், வீரவாணி சந்திக்கு அண்மையிலுள்ள தனது அத்தை வீட்டுக்கு வந்து, அதை ஒப்படைத்துள்ளார். அத்தை குடும்பம் பால் சேகரித்து விநியோகிக்கிறார்கள்.
பின்னர், வீதியின் எதிர்ப்பக்கமுள்ள மற்றொரு அத்தை வீட்டுக்கு சென்று பேசிக்கொண்டிருந்து விட்டு, வீட்டுக்கு வெளியில் வந்துள்ளார். துவிச்சக்கர வண்டியுடன் வீதியோரமாக வந்தவர், வீதியை கடப்பதற்காக- வீதியின் வலது பக்கமாக காத்திருந்துள்ளார்.
இதன்போது, பலாலி இராணுவ முகாமிலிருந்து இயக்கச்சியிலுள்ள இராணுவ முகாமுக்கு சென்று கொண்டிருந்த இராணுவ வாகனம் ஒன்று, புத்தூர் சந்தியில் இருந்து வீதியின் இடது பக்கமாக வந்து கொண்டிருந்தது. திடீரென, அந்த வாகனம் வீதியின் வலது பக்கம் பாய்ந்து, வீதியோரத்தில் காத்திருந்த யுவதியை மோதித்தள்ளி, மரமொன்றுடன் மோதி, கவிழ்ந்தது.
யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வாகனத்தில் பயணித்த 2 சிப்பாய்கள் காயமடைந்து பலாலி இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
வாகனத்தை செலுத்திய இராணுவச்சிப்பாய், அச்சுவேலி பொலிசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்த போது அவர் தூங்கியது தெரிய வந்தது.
கைதான சிப்பாய் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.



