விமான நிலைய போர்ட்டர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விமான நிலைய பொலிஸாரிடம் அழைக்கப்பட்டிருந்த இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் செய்யக்கூடாத ஒன்றை தாம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இன்று காலை பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தாக்குதலுக்கு உள்ளான போர்ட்டர் சம்பவத்திற்குப் பிறகு பணிக்கு வரவில்லை என்றும், அவர் இருக்கும் இடம் தெரியவில்லை என்றும் கேட்டதற்கு பதிலளித்த அமைச்சர், “ஏன் வேலைக்கு வர வேண்டும். இங்கு இல்லையெனினும் அவர் வாழ வழி இருக்கிறது” என்றார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போர்ட்டர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர விமான நிலைய பொலிஸாரிடம் வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.
இன்று காலை இந்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக அமைச்சர் ரணவீர விமான நிலைய பொலிஸாரால் அழைக்கப்பட்டிருந்தார்.
இந்த சம்பவத்தை அடுத்து, அமைச்சர் தனது ஆயுதமேந்திய பாதுகாப்பு அதிகாரிகளுடன் பிரதான நுழைவாயில் வழியாக விமான நிலையத்திற்குள் நுழைய முற்பட்டதையடுத்து, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தலையிட்டு, விமான நிலையத்திற்குள் துப்பாக்கிகளை கொண்டு வர முடியாது என அமைச்சருக்கு அறிவித்தனர்.
அப்போது அவர் பல பாதுகாப்பு அதிகாரிகளை அச்சுறுத்தியதுடன் அமைச்சரின் மனைவியின் சாமான்களுக்கு உதவிய போர்ட்டர் ஒருவரையும் தாக்கியுள்ளார்.




