வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான விசாரணையின் முன்னேற்றத்தை ஜூலை 23ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த முறைப்பாடு இன்று (14) கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல முன்னிலையில் அழைக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
தற்போது பொலிஸாரின் பிடியில் உள்ள கைத்தொலைபேசிகளில் உயிரிழந்தவரின் மனைவி மற்றும் பிள்ளைகளின் புகைப்படங்கள் போன்ற தனிப்பட்ட தகவல்கள் உள்ளதாகவும் அவற்றை பெற்றுக்கொள்ள அனுமதிக்குமாறும் பாதிக்கப்பட்ட தரப்பின் சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடமும் நீதவான் விசாரணை நடத்தினார்.
அந்த தொலைபேசிகள் தொடர்பான அரச பரிசோதகரின் அறிக்கை கிடைத்த பின்னர் உரிய கோரிக்கையை பரிசீலிப்பதாக மாஜிஸ்திரேட் தெரிவித்தார்.




