உலகக்கிண்ண போட்டியில் இலங்கை புதிய தலைமையின் கீழ் களமிறங்கலாமென்ற செய்திகள் வெளியானதையடுத்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் முன்னாள் வீரர் லசித் மலிங்க.
அவர் இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில்- வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இக்கட்டான காலகட்டத்தில் தசுன் ஷானக இலங்கை கிரிக்கெட் அணியின் கப்டனாக பொறுப்பேற்று, தனது அமைதியான மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறையால் அணியில் ஸ்திரத்தன்மையையும் மரியாதையையும் கொண்டு வர முடிந்தது.
ஆசிய கோப்பை உட்பட சிறப்பான கப்டன்சி சாதனையுடன், ஒருநாள் போட்டிகளில் தொடர் வெற்றி சாதனை படைத்ததால், உலகக்கிண்ணத்துக்கு அவர் இலங்கை அணியின் கப்டனாக இருப்பார் என நான் உட்பட அனைவரும் எதிர்பார்த்தோம். இதுபோன்ற முக்கியமான போட்டிகளுக்கு புதிய கப்டனை தெரிவு செய்வது அணிக்கு நிச்சயம் உதவாது. முடிவெடுப்பதற்கு முன் சம்பந்தப்பட்டவர்கள் இதையெல்லாம் கருத்தில் கொள்வார்கள் என்று நம்புகிறேன். உலகக்கிண்ணத்தில் தசுன் ஷானக தலைமையிலான அணியை ஆதரிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
அணித்தலைவர் தசுன் ஷானகவின் துடுப்பாட்ட சராசரி மிக மோசமாக இருப்பது அணிக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்துகிறது. கடந்த சில மாத போட்டிகளை ஒப்பிடுகையில், அவரை விட, பந்துவீச்சாளர்களின் துடுப்பாட்ட சராசரி அதிகமாக உள்ளது. ஆசிய கிணண் இறுதிப்போட்டியில் அவமானகரமான தோல்வியை சந்தித்த பின், அணியில் தண்டச்சோறாக ஒட்டியிருக்கும் தசுன் ஷானகவை நீக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுத்தன.
எனினும், இன்று கூடிய தேர்வுக்குழு உலகக்கிண்ணம் வரை தசுன் ஷானக அணித்தலைவராக நீடிப்பார் என தீர்மானித்திருந்தது.




