யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் வீதியில் செல்பவர்களிடம் தொலைபேசி பறித்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்பது மருத்துவ பரிசோதனையில் உறுதியானது.
கைதானவர்கள் இருவரும் தென்னிலங்கையை சேர்ந்த சிங்கள மாணவர்கள். யாழ்ப்பாண பல்கலைகழக்கத்தின் விஞ்ஞான பீட மாணவர்கள்.
ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையான இவர்கள், போதைப்பொருள் வாங்குவதற்காக தொலைபேசிகளை திருடி விற்பனை செய்து வந்துள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் விஞ்ஞான பீட மாணவர்கள் அடிக்கடி போதைப்பொருள்களுடன் சிக்குவதும், போதைப்பொருள் பாவனையின் பின்னரான தகராறுகளினால் சிக்குவதும் நடந்து வருகிறது. தற்போது யாழ் நகரப்பகுதிகளில் போதைப்பொருளுடன் வெளியார் கைது செய்யப்படும் சம்பவங்களை விட, விஞ்ஞான பீட மாணவர்கள் கைதாகும் சம்பவங்களே அதிகமாக உள்ளன.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழகத்திற்கு வெளியில் சம்பந்தப்படும் பிரச்சினைகளிற்காக ஒழுக்காற்ற நடவடிக்கைக்கு உள்ளாக மாட்டார்கள் என அண்மையில் பல்கலைகழக நிர்வாகம் எடுத்த முடிவே, இந்த சிக்கல்களுக்கு காரணம் என பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். பேராசிரியர் சிறிசற்குணராஜா துணைவேந்தரான பின்னரே, பல்கலைக்கழக பேரவையின் ஒப்புதலுடன் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் சடுதியாக போதைப் பாவனையாளர்கள் அதிகரித்தமைக்கு, இந்த தீர்மானமும் முக்கிய பங்களிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




