கனடாவின் டொரொண்டோ நகரில், ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்ணை இன மற்றும் மத வெறுப்பு நோக்கத்துடன் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி, ஸ்கார்பரோ பகுதியில் உள்ள Progress Avenue மற்றும் Milner Avenue அருகே பயணித்த Durham Regional Transit பேருந்தில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளின் படி, சந்தேகநபர் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த பெண்ணை அணுகி, அவரை நோக்கி பல்வேறு இழிவான மற்றும் முஸ்லிம் எதிர்ப்பு கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, அவர் அந்த பெண்ணை உடல் ரீதியாக தாக்கிய பின்னர் பேருந்திலிருந்து இறங்கி சென்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் காணொளியாக பதிவு செய்யப்பட்டு, கனடாவின் National Council of Canadian Muslims (NCCM) அமைப்பினால் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.
அந்த அமைப்பின் தகவலின்படி, தாக்குதலுக்குள்ளானவர் ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண் ஆவார். காணொளியில் சந்தேகநபர் அவரை “பயங்கரவாதி” என அழைத்ததுடன், ஆபாச வார்த்தைகளையும் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், அவர் எழுந்து அந்த பெண்ணை உதைக்கும் காட்சியும் காணொளியில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில், டொரொண்டோவைச் சேர்ந்த 36 வயதான திருக்குமரன் கந்தசாமி என்பவர் கைது செய்யப்பட்டு, தாக்குதல் (Assault) மற்றும் குற்றவியல் துன்புறுத்தல் (Criminal Harassment) ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர் எதிர்வரும் கோடைக்காலத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணையை டொரொண்டோ பொலிஸ் சேவையின் Hate Crime Unit முன்னெடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.




