வில்பத்துவ வனப் பூங்கா மற்றும் தப்போவ சரணாலயத்தில் வேட்டையாடுவதற்காக பல நாட்களாக முகாமிட்டிருந்த குழுவில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து துப்பாக்கிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கத்திகளும் கைப்பற்றப்பட்டன. வனாத்தவில்லு மற்றும் கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் அலுவலகங்கள் இணைந்து நடத்திய நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
புத்தளம், வனாத்தவில்லு உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள் 35, 40, 45, 50, 60, 67 வயதுடையவர்கள் என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வறட்சி காரணமாக வில்பத்து தேசிய வனப் பூங்காவிற்கும் தப்போவ சரணாலயத்திற்கும் நடுவில் அமைந்துள்ள கலா ஓயாவிற்கு நீர் தேடி வரும் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக பல நாட்களாக முகாமிட்டிருந்த கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.
இடியன் துப்பாக்கி மற்றும் 12 போர் துப்பாக்கி, கத்திகள், மின் விளக்குகள், காட்ரச், வெடிமருந்துகள், 7 மோட்டார் சைக்கிள்கள், கூடாரங்கள், சந்தேக நபர்களுக்கு சொந்தமான செல்போன்கள் மற்றும் பிற பொருட்கள் இந்த சோதனையில் கைப்பற்றப்பட்டது
இந்தச் சுற்றிவளைப்பின் போது மேலும் 8 சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும், சந்தேகநபர்களை கைது செய்வதற்கு வனவிலங்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.




