வவுனியா ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோவில் குஞ்சுக்குளம் பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் இன்று (29) காலை மீட்டெடுத்துள்ளனர்.
அதே, கிராமத்தினை சேர்ந்த 21 வயதுடைய சற்குணராசா டிசாந்த் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிறிதொரு வீட்டின் முன்பாக இளைஞனின் சடலம் காணப்பட்டது.
அவர் இடியன் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
உயிரிழந்த இளைஞருக்கு அருகே கட்டுத் துப்பாக்கியும் அவ் இளைஞரின் மோட்டார் சைக்கிளும் காணப்பட்ட நிலையில் இதனை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.
உயிரிழந்த இளைஞன் இன்று அதிகாலை 1 மணியளவில் ஓமந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோட்டார் சைக்கிளிற்கு எரிபொருள் நிரப்பியுள்ளார். அதன் பின்னர் சுமார் 13 கிலோமீற்றர்களிற்கு அப்பாலுள்ள கோவில் குஞ்சுக்குளம் சென்றுள்ளார்.
அந்த பகுதியில் அவர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார்.
காதல் விவகாரம் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றதா என்ற கோணத்திலும் விசாரணைகள் நடந்து வருகிறது.
வன்னி பெருநிலப்பரவில் இடியன் துப்பாக்கிகள் மனித உயிர்களை பலியெடுக்கும் சம்பவம் ஆபத்தானளவில் உயர்ந்து வருகிறது. இந்த பகுதிகளில் அடிக்கடி இடியன் துப்பாக்கிகளால் கொலை, தற்கொலைகள் இடம்பெறுவது, இடியன் துப்பாக்கிகளின் பயன்பாட்டில் இறுக்கமான நடைமுறைகளை ஏற்படுத்த வழிவகுத்துள்ளது.



