இலங்கையின் முன்னாள் ரக்பி வீரர் மகேந்திரன் செந்தில் குமார் பிரேமநாத் திருட்டு மற்றும் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெல்கொட பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான பிரேமநாத் ஒருவரின் தங்க நகையை திருடுவது சிசிடிவியில் சிக்கியது.
கடுவெல விஹார மாவத்தையில் சந்தேகத்திற்கிடமான கார் ஒன்று நிறுத்தப்பட்டதாக கடுவெல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, சந்தேகத்தின் பேரில் ரக்பி வீரரை கைது செய்து சோதனையிட்ட போது அவரிடம் 5,400 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற பல தங்கச் சங்கிலி கொள்ளைச் சம்பவங்களின் விபரங்களை வெளிக்கொண்டுவர முடிந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த கொள்ளைச் சம்பவங்கள் அனைத்தும் சந்தேகநபர் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் மேற்கொண்டுள்ளதாகவும், கொள்ளைச் சம்பவத்தின் பின்னர் மோட்டார் சைக்கிள்களை விட்டுச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் திருடிய தங்கநகைகளை விற்பனை செய்துள்ளார். திருடப்பட்ட தங்க நகைகள் அனைத்தையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். அவை உருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
முன்னதாக 2012 ஆம் ஆண்டு வீதியில் செல்லும் பெண்களிடம் தங்கச் சங்கிலியைப் பறித்த குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு ஆறு மாத சிறை தண்டனையும் ரூ.7500 அபராதமும் கல்கிசை நீதவான் ருசிர வெலிவத்த விதித்திருந்தார்.
சந்தேக நபர் 2003 ஆம் ஆண்டு தேசிய ரக்பி அணியை பிரதிநிதித்துவப்படுத்தியவர். சந்தேகநபர் 2007 ஆம் ஆண்டு முதல் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.