யாழ்ப்பாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டினுள் இரவு வேளை நுழைத்து , அநாகரிகமாக நடந்து கொண்ட யூடியூப்பர் இளவாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் வறியவர்களுக்கு உதவி செய்வதாக புலம்பெயர் தமிழர்களிடம் நிதியினை பெற்று ,அதன் ஊடாக உதவி செய்வது போன்றன காணொளிகளை தனது யூடியூப் தளத்தில் பதிவேற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் , கடந்த சில தினங்களுக்கு முன்னர் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் பாடசாலை மாணவியொருவரின் வீட்டிற்கு இரவு வேளை சென்ற குறித்த நபர் , பாடசாலை மாணவியை காணொளி எடுக்க முற்பட்டுள்ளார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவிக்கவே ,காணொளியில் நாகரிகமற்ற வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.
குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து பல்வேறு தரப்பினரும் , தமது கண்டனங்களை தெரிவித்து இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , இவ்வாறு உதவி செய்பவர்களின் நிதி கையாடுகைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரிவந்தனர்.
இந்நிலையில் குறித்த வீட்டிற்கு இன்று சென்ற யூடியூப்பர் காணொளி எடுக்க முற்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் யூடியூப்பரை பிடித்து இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆராய்ந்து வருகின்றனர்.



