கொம்மாதுறையில் யானைத்தாக்குதலுக்கு உள்ளாகி ஆசிரியர் ஒருவரின் வீடு பெரும் சேதத்திற்கு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் பற்றுப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொம்மாதுறை மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள மட் / செங்கலடி மத்திய கல்லூரி ஆசிரியரான அருளானந்தம் சூரியகாந்தன் என்பவரின் வீடு இன்று (28) அதிகாலை 3.30 மணியளவில் யானையின் தாக்கத்திற்கு உள்ளாகி பலத்த சேதம் அடைந்துள்ளது.
இந்த சம்பவம் நடந்த போது, வீட்டின் உரிமையாளரான சூரியகாந்தனின் தாயார் சின்னத்தம்பி செல்வம் வீட்டில் இல்லாத நிலையில், வீட்டின் உடமைகள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீடு கிட்டத்தட்ட முழுமையாக சேதமடைந்தது, மேலும் வீட்டில் இருந்த ஆறு மூடை நெல், ஒரு மூடை அரிசி, வீட்டு உபகரணங்கள், நீர் இறைக்கும் இயந்திரம் மற்றும் விவசாய உபகரணங்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன.
இந்த பிரதேசங்களில் யானைகளின் தாக்கம் அதிகரித்து வருவதோடு, இத்தகைய தாக்கங்களால் குறித்த பகுதி மக்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உட்படுகின்றனர். இதற்கான தீர்வு என்னவாக இருக்கும் என்பது பற்றிய கேள்விகள் சமூகத்தில் எழுந்துள்ளன.
இயற்கை வாழ்வு மற்றும் மனித வாழ்வின் சமநிலையை சமாளிக்க, அரசாங்கம் மற்றும் உரிய அதிகாரிகள் யானைத்தாக்குதலால் பாதிக்கப்படும் மக்களுக்கு எந்த வகையில் உதவி செய்வார்கள் என்பது இன்னும் தெளிவில்லாமல் கேள்விக்குரியதாகவே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.



