1400 பில்லியன் மூலதன ஒதுக்கீட்டை கிராமிய திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, 1400 பில்லியன் ரூபாயின் மூலதன ஒதுக்கீட்டை அடுத்த 08 மாதங்களில் கிராமிய மட்டத்தில் பயனுள்ள திட்டங்களுக்காக பயன்படுத்துமாறு அரசாங்க அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (27) நடைபெற்ற மாவட்டச் செயலாளர்களுடனான சந்திப்பிலேயே அவர் இந்த வலியுறுத்தல்களை தெரிவித்தார். இதன் போது, கிராமிய பொருளாதாரத்தை பலப்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்தை 3% முதல் 4% வரை அதிகரிக்க முடியும் என அவர் கூறினார்.
மேலும், கிராமப்புற பொருளாதார வாய்ப்புகளை பலப்படுத்தி, புதிய வாய்ப்புகளை உருவாக்குவது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரச சேவை தொடர்பிலும், மக்கள் மத்தியில் நல்லெண்ணம் இல்லாததற்கு வினைத்திறன் இன்மையே காரணமாக உள்ளது எனவும், இவ்வாறான நிலையை மாற்றி, திருப்திகரமான அரச சேவையை உருவாக்கி அதன் வினைத்திறனை மேம்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
2025 வரவு செலவுத் திட்ட பரிந்துரைகளில் சம்பள மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது. தற்போது 30,000 வெற்றிடங்கள் அரச சேவையில் உள்ளதால், அதற்கான ஆட்சேர்ப்புகள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளன என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அபிவிருத்தி என்பது கட்டிடங்கள் மற்றும் பாலங்களை கட்டுவது மட்டுமல்ல, வீழ்ச்சியடைந்த சமூகக் கட்டமைப்பை மீண்டும் உயர்த்தும் பணி என்றும், இதற்கான பணி, மாவட்ட செயலாளர்களின் பொறுப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், மாவட்டங்களில் உள்ள பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகளை பெறுவதற்கான முன்மொழிவுகள் குறித்த கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
இந்த சந்திப்பில், அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் கலாநிதி சந்தன அபேரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டார மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



