யாழில் ரணிலின் சுதந்திரதின நிகழ்விற்கு எதிரான போராட்டங்களிற்கு தடை: நீதிமன்ற தீர்ப்பு சொல்வதென்ன?

Date:

யாழ்ப்பாணம் மாநகரில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து  ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்துக்கு நீதிமன்றம் நிபந்தனைகளுடன் தடை கட்டளை வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பதில் நீதிவான் பா.தவபாலன் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

யாழ்ப்பாணம் கலாசார நிலையத்தில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்கிறார். இந்த நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்திருந்தது.

இந்த நிலையில் இந்த போராட்டத்துக்கு தடை உத்தரவு கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் விண்ணப்பம் செய்தனர்.

நீதிவான் அறையில் பொலிசார் விண்ணப்பம் செய்ய முயன்ற போதும், பகிரங்க மன்றில் விண்ணப்பம் செய்யுமாறு நீதிவான் அறிவித்தார்.

மக்கள் கூடுமிடத்தில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால், கலவரங்கள் ஏற்பட்டு, இந்திய, இலங்கை நல்லுறவில் பாதிப்பு ஏற்படலாமென்றும், இலங்கையின் பொருளாதார நெருக்கடியை அது மேலும் ஆபத்தில் தள்ளுமென்றும் பொலிசார் சமர்ப்பணம் செய்தனர்.

அமைதிவழி போராட்டங்களை தாம் தடுப்பதில்லையென்றும், அண்மையில் ஜனாதிபதியின் யாழ் விஜயத்தின் போது, மக்களின் போராட்டம் வன்முறை வடிவமெடுத்து, பொலிசாரை தாக்கும் நிலைமைக்கு சென்றதாகவும் சுட்டிக்காட்டினர்.

கலவரம் ஏற்படுமென எப்படி தெரியுமென நீதிவான் கேள்வியெழுப்பினார். தேசிய புலனாய்வுத்துறையின் அறிவித்தல் தமக்கு கிடைத்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி க.சுகாஷ், வேலன் சுவாமி, தீபன் லலிசன், வாசுகி, கிளிநொச்சி மற்றும் வவனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்க தலைவர்களிற்கு போராட்டம் நடத்த தடைவிதிக்க கோரினர்.

பேரணி செல்லும் பாதைகளில் தடைவிதிக்கும்படி பொலிசார் கோரினர். வேம்படி சந்தி, கொட்டடி, பண்ணை பால பகுதிகளிலும் தடையுத்தரவு கோரினர்.

எனினும், பேரணி பயணிக்கும் பாதைகளில் தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

ஜனநாயக வழியில், ஜனநாயக விழுமியங்களை பேணி அமைதியான சாத்வீகப் போராட்டம் நடத்துவதை நீதிமன்றம் தனக்குள்ள நியாயாதிக்கத்தையோ, தற்துணிவையே பயன்படுத்தி நிறுத்த முடியாது. அதனால் அமைதியான போராட்டங்களை தடைசெய்ய முடியாது. போராட்டக்காரர்கள் வன்முறையாக நடந்தால் பொலிஸ் அதிகாரத்தை பயன்படுத்த முடியும்.

நிகழ்வு நடக்கும் இடத்தில் 500 மீற்றர்  எல்லைக்குள் சுலோகங்கள் தாங்கி, கட்சிக்கொடிகள், பனர்கள் தாங்கி, நிகழ்ச்சியை குழப்பி, கலவரத்தை தூண்டும் விதமாக போராட்டம் நடத்த நீதிவான் தடைவிதித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோருக்கு பாராளுமன்ற சிறப்புரிமையுள்ளதை சுட்டிக்காட்டிய நீதவான், அவர்கள் உள்ளிட்ட 8 பேரும் அமைதியான முறையில் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தால், பொலிசார் தடைசெய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இறப்புக்கு ஆதாரமாக வங்கிக்கு சகோதரியின் எலும்புக் கூட்டுடன் வந்த நபர்

ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தை சேர்ந்த, வயதான பழங்குடியின நபர் ஒருவர், தனது...

19 பிக்குகள் போதைப்பொருள் பாவித்தது உறுதி

சுமார் 112 கிலோகிராம் குஷ் மற்றும் ஹாஷ் ரக போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க...

அல்லைப்பிட்டி சிறுவர் ஆற்றல் மையம் தீயில் எரிந்தது!

அல்லைப்பிட்டியில் இயங்கிவரும் "தபோவனம்" சிறுவர் ஆற்றல் மையம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. விசமிகளால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்