கலப்புமுறை தேர்தல்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் தனித்தனியாக எதிர்கொள்வது குறித்த விடயங்கள் தொழில்நுட்பரீதியில் ஆராயப்பட்டுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
நேற்று வவுனியாவில் நடந்த இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேர்தல்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தனித்தனியாக முகம் கொடுப்பது பற்றி தொழில்நுட்பரீதியில் ஆராயப்பட்டது. வட்டார ரீதியாக ஒரு வீதமும், அதற்கு மேலதிகமான விகிதாசார முறையில் இன்னொரு வீதமும் சேர்த்துக் கொள்ளப்படுவது தொடர்பில் சென்றமுறை எமக்குள்ள அனுபவங்களின் அடிப்படையில் பார்த்து, தனித்தனியாக போட்டியிட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கூடுதலான ஆசனங்கள் கிடைக்குமா இல்லையா என்ற தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளோம். அது தொடர்பில் நாம் சிந்திப்போம் என்றார்.
முன்னதாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தின் போது, சில உறுப்பினர்கள் தனித்து போட்டியிடுவது பற்றிய விவகாரத்தை எழுப்பினர்.
அப்போது பதிலளித்த எம்.ஏ.சுமந்திரன், கலப்பு முறை தேர்தல்களில் தனித்தனியாக போட்டியிடுவது தொடர்பில் இரண்டு பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுடன் உத்தியோகப்பற்றற்ற முறையில் பேசியதாகவும், அது தொடர்பில் ஆராய அவர்கள் சாதகமான நிலைப்பாட்டில் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.




