அர்ஜென்டினாவின் ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுகூடியதைத் தொடர்ந்து, நாட்டு மக்கள் ஒருமைப்பாட்டுடன் செயல்படும்படி ஜனாதிபதி அல்பெர்ட்டோ ஃபெர்னாண்டஸ் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
அதிகரித்துவரும் பணவீக்கமும், நாட்டின் கடனும் மக்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஏழ்மையைப் போக்க அரசாங்கம் இன்னும் கூடுதல் நிதி ஒதுக்கவேண்டும் என்று இடதுசாரிக் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மிதவாதக் கட்சியைச் சேர்ந்த 2 பேர் கடந்த மாதம் அர்ஜென்டினா அமைச்சரவையிலிருந்து விலகிவிட்டனர்.
அர்ஜென்டினாவின் பணவீக்கம் 60 விழுக்காட்டுக்கு மேல் பதிவாகியிருக்கிறது.
அதனால் அதன் நாணய மதிப்பு பாதிக்கப்பட்டதோடு, எரிபொருள் இறக்குமதி விலைகளும் கூடியிருக்கிறது.
அர்ஜென்டினாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டுப் பேசிய ஜனாதிபதி ஃபெர்னாண்டஸ், சமூகத்தின் வெவ்வேறு பிரிவினர் ஒருமைப்பாட்டுடன் செயல்படுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்.
நிதியைச் சமநிலைப்படுத்தவும், நாணய மதிப்பை நிலைப்படுத்தவும் நாடு முற்படவேண்டும் என்றார் அவர்.
பல தசாப்தங்களாக பொருளாதார நெருக்கடிகளை கடந்து வந்த அர்ஜென்டினா, தோல்வியடைந்த 2018 திட்டத்தை மாற்றுவதற்காக இந்த ஆண்டின் தொடக்கத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் 44 பில்லியன் டொலர் கடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டது.
கடுமையான பொருளாதாரக் கொள்கைகளுக்கு சர்வதேச நாணய நிதியம் மீது பலர் குற்றம் சாட்டுகின்றனர்.
பியூனஸ் அயர்ஸ் தெருக்களில் ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் சனிக்கிழமை பிற்பகல் “சர்வதேச நாணய நிதியத்திலிருந்து பிரிந்து செல்லுங்கள்” என்ற பதாகைகளுடன் பேரணியாக சென்றனர். போராட்டக்காரர்கள் கடனை செலுத்த வேண்டாம் என்று கூறினர்.




