காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகையின் முன்பாக அமைதிவழி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய குண்டர்குழுவை வழிநடத்திய முன்னாள் அமைச்சர்கள் உட்பட 22 பேரை உடனடியாக கைது செய்து ஆஜர்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு சட்டமா அதிபர் இன்று பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பான பொலிஸ் விசாரணைகளின் பகுதிகள் உட்பட சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுருக்கமான தகவல்களைப் பரிசீலித்த சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
குற்றச் செயலில் ஈடுபட்ட அரசியல்வாதிகளுக்கு மேலதிகமாக கொழும்பு பகுதிக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை உடனடியாக கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பொலிஸ் மா அதிபருக்கு மேலும் பணிப்புரை விடுத்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான சஞ்சீவ எதிரிமான்ன, மிலன் ஜயதிலக, மொரட்டுவை மேயர் சமன்லால் பெர்னாண்டோ, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மற்றும் சுயதொழில் புரிவோர் சம்மேளனத்தின் தலைவர் மஹிந்த கஹந்தகம, டான் பிரியசாத் உள்ளிட்டோரும் அடங்குகிறார்கள்.
இந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளின் சுருக்கத்தை உன்னிப்பாக அவதானித்து முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.
சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் கொண்ட குழு அவதானித்து வருவதாகவும், இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் குறித்து விசாரணை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.




