வீட்டின் மாடியில் பதுங்கியிருந்த நைட்டி திருடனை பெண் ஒருவர் மொபைல் மூலம் கண்டறிந்து போலீசாருக்கு தகவல் கொடுத்த சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம், கீழூர் அருகே வசித்து வருபவர்கள் ஓய்வு பெற்ற இராணுவ வீரரான மத்யூ- சூசாம்மா தம்பதி. இவர்களுக்கு சோனியா என்ற மகள் உள்ளார். அவர் திருமணம் ஆகி பெரம்பலூரில் கணவருடன் வசித்துவருகிறார். என்னதான் கணவருடன் வசித்து வந்தாலும் வீட்டில் வயதான தனது தாய் தந்தையர் இருப்பதால் சோனா தனது வீட்டை சுற்றிலும் சிசிரிவி கமராக்களை வைத்து இடையிடையே மொபைல் போன் மூலம் வீட்டைகண்காணித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் சிசிடிவி காட்சிகளை கண்காணித்து கொண்டிருந்த போது, வீட்டின் மாடி பகுதியில் நைட்டி அணிந்துகொண்டு ஒரு ஆண் நின்று, துணியின் மூலம் கமராவை மறைக்க முயன்று கொண்டிருப்பதை கண்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சோனியா, உடனடியாக குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.
எஸ்.ஐ.ஜெயமோகன் என்பவரது தொலைபேசிக்கே உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். அந்த தகவல் கிடைத்த போது, தலையோலப்பறம்பு பொலிஸ் நிலைய எஸ்.ஐ ஜெயமோகன் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
குற்றம் நடந்த பகுதி வேலூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்டது. ஆனால் அதை காரணம் காட்டி நேரத்தை தாமதிக்காத ஜெயமோகன் சம்பவ இடத்திற்கு சென்றார். எனினும், வேலூர் பொலிசாருக்கும் தகவல் வழங்கினார்.
வீட்டின் பின் பகுதியினால் நுழைந்த பொலிஸ்காரர்களை அவதானித்த திருடன், மாடியிலிருந்து முற்றத்தில் குதித்து, தப்பியோடினான்.
வீதிகள், ரப்பர் தோட்டங்கள், நெல் வயல்கள், பற்றைகள் என பல கிலோமீற்றர் தூரம் திருடன் ஓடினான். எஸ்.ஐ ஜெயமோகன் தலைமையிலான பொலிசார் விடாது விரட்டி, திருடனை கைது செய்தனர்.
கைதான திருடன் பொபின்ஸ் ஜோன் (32) என அடையாளம் காணப்பட்டார். இவர் மீது பல திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏறக்குறைய இதேபோன்ற சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் ஏற்கனவே பதிவாகியுள்ளது. அமெரிக்காவில் அமர்ந்து சிசிடிவி காட்சிகளை நேரலையில் பார்த்துக் கொண்டிருந்த வீட்டு உரிமையாளரின் எச்சரிக்கையின் பேரில், மூடிய வீட்டில் நடந்த திருட்டு முயற்சியை போலீசார் முறியடித்துள்ளனர்.
கான்பூரின் சாகேரி பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டின் சிசிடிவி காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்த வீட்டு உரிமையாளர் விஜய் அஸ்வதி, கொள்ளையர்கள் உள்ளே நுழைய முயற்சிப்பதைக் கவனித்தார். உடனடியாக அவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார், ஆனால் இன்ஸ்பெக்டர் மதுர் மிஸ்ரா தலைமையிலான போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு வருவதற்குள் திருடர்கள் உள்ளே நுழைந்தனர்.
திருடர்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். துப்பாக்கிச் சண்டையில் கும்பல் தலைவன் ஸ்ரீநாத் ரத்தோட் சுட்டுக் கொல்ல்பட்டார். அவரது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.



