கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்களின் பேச்சில் மயங்கி, தடுப்பூசி செலுத்தாமல் நோய் எதிர்ப்பு சக்தியை பெற கொரோனா தொற்றிற்குள்ளாகிய பாடகி பலியாகியுள்ளார்.
செக் குடியரசின் கிராமியப் பாடகர் ஹானா ஹோர்கா. கொரோனா தடுப்பூசி எதிர்ப்பாளர்களின் அபாயகரமான பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட அவர் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமலேயே இருந்தார்.
இந்நிலையில், அண்மையில் அவர் தனக்கு வலுக்கட்டாயமாக கொரோனா தொற்று ஏற்படும்படி செய்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செக் குடியரசில் உள்ள விடுதிகள், பார்கள், திரையரங்குகள், கலை நிகழ்ச்சிக் கூடாரங்களில் நுழைய இரண்டு டோஸ் தடுப்பூசி அவசியம். இல்லையேல் அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு தனிமைக் காலம் முடிந்தவராக இருக்க வேண்டும்.
இந்நிலையில், 57 வயது கலைஞரான ஹானா ஹோர்கா, தடுப்பூசி செலுத்திக் கொள்வதைவிட கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இயற்கையாக எதிர்ப்பாற்றலைப் பெற விரும்பினார். இதனால், தனது கணவருக்கும், மகனுக்கும் கொரோனா தொற்று உண்டான போது அவர் அவர்களுடன் இயல்பாக கூடவே இருந்துள்ளார். இதனால் அவரும் தொற்றுக்கு உள்ளானார். ஆனால் அவருக்கு நோய் பாதிப்பு தடுப்பூசி செலுத்தாத காரணத்தால் தீவிரமடைந்தது. இந்நிலையில் அவர் கடந்த ஞாயிரன்று உயிரிழந்தார்.
இது குறித்து ஹானாவின் மகன் ரெக் உள்ளூர் வானொலிக்கு அளித்த பேட்டியில், எனது தாயாரின் மறைவுக்குக் காரணம் உள்ளூரில் உள்ள தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் குழு தான். அவர்கள் பிரச்சாரத்தாலேயே என் தாயார் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. இன்று அவர் இறந்துவிட்டார். அந்த இரத்தக் கறை உள்ளூர் தடுப்பூசி எதிர்ப்பாளர்களின் கைகளில் உள்ளது. கொரோனா வந்து சென்றால் இயற்கையாக நிலையான எதிர்ப்பாற்றல் வரும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத நிலையில் எதற்காக இப்படியான பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர் என்று கேள்வி எழுப்பினார்.