பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு பாலியல் துன்புறுத்தல் செய்தமைக்காக கைதான, கந்தர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தொடர்பில் பல தகவல்கள் சிங்கள ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
அவர் ஏற்கனவே இடைநிறுத்தங்கள் உள்ளிட்ட பல கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த நிலையிலும், அனுபவம் வாய்ந்த, திறமையான அதிகாரி என உயர்மட்ட சிபாரிசின் அடிப்படையிலேயே கந்தர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தமை தற்போது தெரியவந்துள்ளது.
பொலிஸ் சீருடையில், பொலிஸ் கான்ஸ்டபிளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அர்ஜுன விஜேசிங்க, கந்தர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவிக்கு பொருத்தமான திறமையான அதிகாரியாக பொலிஸ் உயர்மட்டத்தால் ஒக்டோபர் 26 ஆம் திகதி சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
இந்த அதிகாரி அனுபவம் வாய்ந்த அதிகாரி என அமைச்சர் சரத் வீரசேகரவின் அமைச்சும் பொலிஸ் மா அதிபருக்கு பரிந்துரை அனுப்பியிருந்தது.
ஏற்கனவே பணி இடைநீக்கம் மற்றும் குற்றச்சாட்டுக்களிற்கு உள்ளான அதிகாரியை அனுபவம் வாய்ந்த அதிகாரியாகப் பரிந்துரைத்து கந்தர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நியமித்ததாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போது, இந்த அதிகாரிக்கு எதிராக பொலிஸ் புத்தகத்தில் பொறுப்பதிகாரி எழுதிய குறிப்புக்களை, பொலிஸ் புத்தகத்திலிருந்து கிழித்தமைக்காகவே அவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
மேலும் பொகவந்தலாவ, பிடபெத்தர, மாத்தறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் வேளையில் தகாத உறவில் ஈடுபடுவதற்காக தனது மனைவி எனக் கூறி பெண்ணொருவரை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நிறுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டும் உள்ளது. மற்றும், முறையற்ற ஆலோசனைகளை வழங்குதல் மற்றும் பெண் அதிகாரிகளை செல்வாக்கு செலுத்துதல் உட்பட பல குற்றங்களில் அந்த அதிகாரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.