பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சங்கமன்கண்டியில் நேற்று (11) அதிகாலை வைக்கப்பட்ட புத்தர் சிலை, நேற்று நள்ளிரவில் அகற்றப்பட்டுள்ளது.
தமிழர்கள் வாழும் சங்கமன்கண்டி பகுதியிலுள்ள மயானத்துக்கு முன்பாக உள்ள அரச காணியில் நேற்று அதிகாலை 4 மணியளவில் புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டது.
இதனையடுத்து அப்பிரதேச மக்கள் கொந்தளிப்படைந்தனர்.
காரைதீவு பிரதேசசபை தவிசாளர் கி.ஜெயசிறில், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் ஏ.றஹீம், திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் கமலராஜன் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு சென்றதையடுத்து, அங்கு எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பிரதேச மக்களும், அரசியல் பிரமுகர்களும் வீதியோரம் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
அம்பாறை உதவி அரசாங்க அதிபர்,பொத்துவில் பிரதேச செயலாளருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதையடுத்து, பொத்துவில் பிரதேச செயலாளர் சம்பவ இடத்திற்கு வந்து, சட்டவிரோதமாக சிலை வைத்தவர்களுடன் கலந்துரையாடினார்.
இதையடுத்து, அனைவரும் அங்கிருந்து அகற்றப்பட்டு, புத்தர் சிலைக்கு பொலிஸ் பாதுகாப்பு இடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த சிலையை வைப்பதற்கு முறையான அனுமதியை பிரதேச சபையில் பெற்றிருக்கவில்லை எனத் தெரிவித்து, பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் பொத்துவில் பிரதேச சபையின் செயலாளர் முறைப்பாடொன்றினையும் பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று இரவு 11.45 மணியளவில், சிலை வைத்த பௌத்த பிக்குகள் வந்து, சிலையை எடுத்துச் சென்றனர்.
இது தொடர்பில் காரைதீவு பிரதேசசபை தவிசாளர் கி.ஜெயசிறில் தமிழ்பக்கத்திடம் தெரிவித்த போது,
”நேற்று அதிகாலை 4 மணியளவில் புத்தர் சிலை வைக்கப்பட்டது. அங்குள்ள மயானத்திற்கு அருகில் ஏற்கனவே இரண்டு முறை புத்தர் சிலை வைக்க முயற்சிக்கப்பட்டு, முறியடிக்கப்பட்டது.
நேற்று புத்தர் சிலை வைக்கப்பட்ட தகவலை பிரதேச மக்கள் வழங்கியதையடுத்து நான், பொத்துவில், திருக்கோவில் பிரதேசசபைகளின் தவிசாளர்களும் அங்கு சென்றோம்.
விகாராதிபதியிடம் சென்று, ஏன் இவ்வாறு அடாவடியாக நடக்கிறீர்கள்? தமிழ், சிங்கள மக்கள் ஒரளவு இணக்கப்பாட்டுடன் வாழும் இந்த பகுதியில் முரண்பாட்டை ஏற்படுத்த முயற்சிக்காதீர்கள். ஒரேநாடு ஒரே சட்டம் என அரசாங்கம் செயலணியை பிக்கு தலைமையில் அமைத்துள்ள நிலையில், நீங்கள் இப்படி செயற்படுகிறீர்கள். புத்தபிரானின் போதனையை பின்பற்றுவதாக கூறிக்கொண்டு இப்படி அடாவடித்தனத்தில் ஈடுபட முடியாது. சிலையை அகற்றுங்கள் என்றேன்.
2500 வருடங்களின் முன் இங்கு பன்சாலை இருந்தது. இது எமது அடையாளம். இங்கு புத்தர் சிலை வைப்பது எமது உரிமை. இது பௌத்த நாடு. இங்கு நீங்கள் கேள்விகேட்ட உங்களிற்கு எந்த அதிகாரமும் கிடையாது. அனுமதி பெற்றே சிலையை வைத்தோம் என்றார்.
யாரிடம் அனுதி பெற்று வைத்தீர்கள் என கேட்டேன். அந்த அனுமதியை அவர்கள் காண்பிக்கவில்லை.
பொத்துவில் பிரதேச செயலாளர், அம்பாறை உதவி அரசாங்க அதிபருக்கு தொலைபேசி வழியாக நான் தகவல் வழங்கினேன்.
பிரதேச செயலாளர் வந்து பௌத்த பிக்குகளுடன் ஒரு கலந்துரையாடல் நடத்தினார். உடனடியாக சிலையை அகற்றிக் கொண்டு வெளியேறுமாறு அவர் அறிவுறுததியிருந்தார்.
இதையடுத்து, பொலிசார் அங்கு கூடியிருந்த மக்களிடம், பிரச்சனைக்கு சுமுக தீர்வு ஏற்பட்டு விட்டது, கலைந்து செல்லுங்கள் என கூறினர். உடனடியாக சிலையை எடுத்துக் கொண்டு செல்வது வெட்கம் என சொல்கிறார்கள், இரவில் அகற்றுவதாக சொல்லியுள்ளனர் என தெரிவித்தனர். இதையடுத்து, அங்கிருந்த மக்கள் பிரதிநிதிகளும், மக்களும் கலைந்து சென்றனர்.
நேற்று இரவு 11.45 அளவில் பிக்குகள் வந்து சிலையை எடுத்துச் சென்றனர். இருட்டில் வைக்கப்பட்ட புத்தர் சிலையை இரவிலேயே எடுத்துக் கொண்டு சென்று விட்டனர்’ என்றார்.




