சொலமன் தீவுகளில் ஏற்பட்ட வன்முறையின்போது, அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு தீவைக்கப்பட்டுள்ளது.
தென்பசிபிக் பெருங்கடலில் நூற்றுக்கணக்கான தீவுகளை கொண்ட நாடு சொலமன் தீவுகள். இந்ந நாட்டின் பிரதமராக கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இருந்து வருபவர் மானசே சோகவரே. இந்த நிலையில் அண்மையில் இவர், தைவானுடனான தூதரக உறவை துண்டித்துவிட்டு, சீனாவுடன் தூதரக உறவை ஏற்படுத்தினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
அரசின் இந்த முடிவை நாட்டின் பல்வேறு மாகாண அரசுகள் ஏற்க மறுத்தன. அத்துடன், வாக்குறுதியளிக்கப்பட்ட உள்கட்டமைப்புகளை வழங்கத் தவறியதாகவும் பிரதமர் மீது குற்றம் சுமத்துகின்றனர். இதை தொடர்ந்து, பிரதமர் மானசே சோகவரேவை பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
தலைநகரில் இருந்து 120கிமீ (75 மைல்) தொலைவில் உள்ள நாட்டின் மிகப் பெரிய தீவான மலேட்டா மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினர்.
இந்த நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று தலைநகர் ஹோனியாராவில் உள்ள நாடாளுமன்றம் முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது பொலிசார் அவர்களை விரட்டியடிக்க முயன்றதால் இருதரப்புக்கும் இடையில் மோதல் வெடித்தது. பின்னர் இந்த மோதல் பெரும் வன்முறையாக வெடித்தது.
போராட்டக்காரர்கள் மீது பொலிசார் கண்ணீர்ப்புகை குண்டு வீசினர்.
இதை தொடர்ந்து போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டிடத்துக்கும், அதன் அருகில் உள்ள ஒரு பொலிஸ் நிலையத்துக்கும் தீவைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



