பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை குறிவைத்து அவதூறான கருத்துக்களை வெளியிடும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக விரிவான உள்ளக விசாரணை நடத்தப்பட வேண்டும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் அமரவீர, தனது 27 ஆண்டுகால நாடாளுமன்ற வாழ்க்கையில், தற்போதைய நாடாளுமன்றத்தைப் போல, ஒழுக்கமற்ற நாடாளுமன்றத்தை ஒருபோதும் பார்த்ததில்லை..
சில பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை காரணமாக பொதுமக்கள் பாராளுமன்றத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஒரு சிலரின் அறிக்கைகள் மற்றும் அவர்களின் நடத்தை காரணமாக 225 எம்.பி.க்களையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெண் உறுப்பினர்களை அவமரியாதை செய்யும் வகையில் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியிடும் அறிக்கைகளை தாம் அங்கீகரிப்பதில்லை என தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, அவ்வாறான நபர்களை நெறிப்படுத்தும் பொறுப்பு கட்சிகளுக்கும் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் சர்வதேச ரீதியில் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பி திஸ்ஸ குட்டியாராச்சி, எதிர்தரப்பு பெண் எம்.பி தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த போது, ஆளுந்தரப்பினர் யாரும் அதை கண்டிக்கவில்லையென்பதும், கெக்கட்டமிட்டு சிரித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.