வவுனியா, தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்துள்ளார்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதத்துடன், தாண்டிக்குளம் பகுதியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முச்சக்கரவண்டி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையைப் பயன்படுத்திய போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
விபத்தின் போது முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்ததில், அதில் பயணித்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி, வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.



