இலங்கை அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயினால் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோவை, இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் இலங்கை அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே செய்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
சம்பவம் தொடர்பில் அறிக்கை தாக்கல் செய்யும் போதே குற்றப் புலனாய்வுப் பிரிவினர், கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகலவுக்கு இது தொடர்பில் அறிவித்துள்ளனர்.
ஒக்டோபர் 23 ஆம் திகதி நடத்தப்பட்ட ஜூம் கலந்துரையாடலின் போது, சுரேஷ் சாலேயை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகளுடன் தொடர்புபடுத்தி அருட்தந்தை குற்றம்சாட்டியதாக முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கலந்துரையாடலின் போது கூறப்பட்ட தவறான கூற்றுக்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் அழைப்பு விடுத்ததாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த முறைப்பாடு தொடர்பில் அனைத்து தரப்பினரிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக சிஐடி தெரிவித்துள்ளது.
அதன்படி அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோவை இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



