நான் ஒரு சாதாரண விவசாயி. என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டும்தான் என பாஜக தலைவர் அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார்.
முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பிஜிஆர் எனர்ஜி என்ற தனியார் நிறுவனத்துக்கு தமிழக மின்சார வாரியம் பல்வேறு சலுகைகளை செய்துள்ளதாக சில ஆவணங்களை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதற்கு தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
மேலும், இதற்காக அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கூறியிருந்தார். ட்விட்டரில் இது தொடர்பாக அண்ணாமலைக்கும், செந்தில் பாலாஜிக்கும் இடையே ட்விட்டரில் வார்த்தைப் போர் நடைபெற்றது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட பிஜிஆர் நிறுவனம் அண்ணாமலைக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் ஒரு வாரத்துக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும், அவதூறு பரப்பியதற்காக ரூ.500 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று கோரியுள்ளது.
இதற்குப் பதிலளித்துள்ள அண்ணாமலை, “சார், 500 கோடி ரூபாய்க்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றீர்கள் நான் ஒரு சாதாரண விவசாயி என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டும்தான்! அறிவாலய அமைச்சர்களைப் போல ஊழல் செய்து கொடுப்பதற்கு எதுவுமில்லை! நம்முடைய நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இருக்கிறது! சந்திப்போம்!” என்று பதிவிட்டுள்ளார்.
அவரின் இந்த ட்வீட்டுக்கு திமுகவினர் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.