ஜிஎஸ்பி பிளஸ் வர்த்தகச் சலுகையை பெறுவதற்கான நிபந்தனைகளை உறுதிசெய்கிறதா என்பதை ஆராய்வதற்காக உயர்மட்ட ஐரோப்பிய ஒன்றியக் குழு நாளை (27) இலங்கைக்கு வரவுள்ளது.
மனித மற்றும் தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி தொடர்பான 27 விவகாரங்களில் இலங்கையின் தகுதிநிலை கணக்கிடப்படும்.
பொதுவாக ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஒருமுறை, தகவல் பரிமாற்றம், உரையாடல் மற்றும் வருகைகளின் மூலம் ஜிஎஸ்பி பிளஸ் பயனாளி நாடுகளை, ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
2017 இல் இலங்கை இந்த சலுகையை மீண்டும் பெற்ற பின்னர் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளின் மூன்றாவது கண்காணிப்பு பயணம் இதுவாகும்.
இலங்கை ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை பெறுவதற்கு, பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்து இடையூறாக இருந்து வருகிறது. இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் தொடர்ச்சியான பயன்பாட்டை கேள்விக்குள்ளாக்கும் தீர்மானத்தை, கடந்த ஜூன் மாதம் ஐரோப்பிய பாராளுமன்றம் நிறைவேற்றியது.
2017ஆம் ஆண்டு, இந்த சலுகையை மீண்டும் பெற்றபோது, பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றம் செய்வதோடு, மனித உரிமைகளை நிர்வகிக்கும் 27 சர்வதேச மாநாடுகளை திறம்பட செயல்படுத்தும் நிபந்தனைகளை இலங்கை ஏற்றுக்கொண்டது என்பதை ஐரோப்பிய ஒன்றிய அண்மைய தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது.
எனினும், பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை நீக்கவில்லை.
எனினும், ஐரோப்பிய தீர்மானத்தை தொடர்ந்து இலங்கை அவசரகதியில் சில தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
உதாரணமாக, பயங்கரவாத சட்டத்தின் கீழ் ஒரு நபர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட வேண்டுமா இல்லையா என்பது குறித்து பாதுகாப்பு அமைச்சருக்கு அறிவுறுத்த ஒரு ஆலோசனை குழுவை நியமிக்க விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி அசோக டி சில்வா தலைமையில் அமைக்கப்பட்டது. இந்த குழுவிற்கு 50 க்கும் மேற்பட்ட கைதிகள் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி கூறினார்.
இலங்கை வரும் ஐரோப்பிய ஒன்றிய குழு, நாளை மறுாள் (28) தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்திக்கிறது. இதன்போது, ”பயங்கரவாத தடைச்சட்டம் குறித்த இலங்கையின் உத்தரவாதங்களின் நம்பகமற்ற தன்மையை குறிப்பிட்டு, அதை முற்றாக நீக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தவுள்ளோம். பெருந்தொற்று நிலைமை, சட்டங்களை பயன்படுத்தி, சிறுபான்மை மக்களின் அரசியல் உரிமைகளை ஒடுக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபடுவதை- குறிப்பாக நினைவேந்தல் உரிமையை தடுப்பதை சுட்டிக்காட்டுவோம். இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் சலுகை வழங்குவதெனில், சிறுபான்மையினரின் அரசியல், மத உரிமைகள் குறித்த தெளிவான உத்தரவாதத்தை பெறுவதன் அவசியத்தை சுட்டிக்காட்டுவோம்“ என ரெலோவின் மூத்த தலைவர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.