யாழ்ப்பாணத்தில் பிறந்து பிரித்தானியா குடியுரிமையை பெற்ற சிவேந்திரன் வெற்றிவேல்பிள்ளை அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்ட கடுமையான நிதிக் குற்றங்களை ஒப்புக் கொண்டுள்ளார். அவருக்கு 115 வருட சிறைத்தண்டனையும், 11.5 மில்லியன் டொலர் அபராதமும் விதிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
அப்ராஜ் ஈக்விட்டி குழுவின் முன்னாள் மூத்த நிர்வாகி, பங்குதாரரான சிவேந்திரன் மீது ஒன்பது குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
நியூயோர்க்கின் தெற்கு மாவட்டத்தில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெறுகிறது.
சிவேந்திரன் வெற்றிவேல்பிள்ளை வடமேற்கு லண்டனில், 3 மில்லியன் பவுண்ஸ் மதிப்புள்ள மாளிகையில் வசிக்கிறார். “அச்சுறுத்தல்கள் அல்லது வாக்குறுதிகள் அல்லது பிற முறையற்ற தூண்டுதல்கள்” காரணமாக குற்ற ஒப்புதலை வழங்கவில்லை, தானாக முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்று அவரது குற்றவாளி மனு ஆவணங்கள் கூறுகின்றன.
சிவேந்திரன் வெட்டிவேப்பிள்ளையின் குற்றவாளி மனு அமெரிக்க நீதிபதியால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கொரோனா நிலவரம் மற்றும் சிவேந்திரனின் மருத்துவ நிலை காரணமாக வீடியோ கொன்ஃபரன்ஸ் அல்லது தொலைபேசி மூலம் வழக்கை நடத்த அனுமதித்தார். எதிர்வரும் வழக்கு தவணைகளின் போது இந்த முறை கணக்கிலெடுக்கப்படும்.
நிறுவனத்தின் தலைமை நிர்வாகிக்கு எதிராக சாட்சியமளிக்க, குறைந்த தண்டனையை பெறும் நோக்கத்துடன் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கருதப்படுகிறது.
தலைமை நிர்வாகி முஸ்தபா அப்தெல்-வதூத் தன் மீதான குற்றங்களை நிராகரிக்கிறார். இன்னொரு நிர்வாகி ஆரிஃப் நக்வி, தான் எந்த குற்றமும் செய்யவில்லையென வாதிடுகிறார்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள், முதலீட்டாளர்களின் “குறைந்தது நூற்றுக்கணக்கான மில்லியன்” பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக அமெரிக்க குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னாள் அபிராஜ் நிர்வாகப் பங்குதாரர் சிவேந்திரன், நிறுவனத்தின் நிதியை முதலீட்டாளர்களிடமிருந்து மறைக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. மற்றும் முதலீடுகளின் மதிப்பீடுகளை அரை பில்லியன் டொலர்களுக்கு மேல் உயர்த்தி முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக்குற்றங்கள் 2014 – 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாட்லி கல்லூரியின் பழைய மாணவனும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரமுகரும் 1994 – 96 காலப்பகுதியில் கொழும்பு மேயராகவும் பதவிவகித்த கனகசபை கணேசலிங்கம் மற்றும் யமுனா கணேசலிங்கம் தம்பதியினரின் மகள் மேனகாவை திருமணம் செய்தவர் சிவேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.



