பல தசாப்தங்களாக வெளிநாட்டு படையெடுப்பாளர்களால் கைப்பற்ற முடியாமலிருந்த ஆப்கானிஸ்தானின் வடக்கு பன்ச்ஷிர் பள்ளத்தாக்கின் மலை உச்சியில் நிலை கொண்டுள்ள, தலிபான் எதிர்ப்பு படையணிகள், தலிபான்களை இறுதிவரை எதிர்ப்பதாக சூளுரைத்துள்ளனர்.
பன்ச்ஷிர் பள்ளத்தாக்கிற்கான உணவு, எரிபொருள் விநியோகத்தை தலிபான்கள் தடைசெய்துள்ள நிலையில், சர்வதேச உதவியை அவர்கள் கோரியுள்ளனர்.
பன்ச்ஷிர் பள்ளத்தாக்கில் நிலைகொண்டுள்ள தலிபான் எதிர்ப்பாளர்கள் தமக்கு தேசிய எதிர்ப்பு முன்னணி (NRF) என பெயரிட்டுள்ளனர்.
தற்போது, ஆப்கானிஸ்தானில் உள்ள வலுவான தலிபான் எதிர்ப்பு அமைப்பு இதுவாகும்.
என்ஆர்எஃப் அமைப்பினர் தமது பகுதியை சூழ கண்காணிப்பு நிலையங்களை மணல் மூட்டைகளால் அமைத்துள்ளனர். அங்கு நவீன ஆயுதங்களையும் வைத்துள்ளனர்.
பன்ச்ஷிர்பள்ளத்தாக்கில் தலிபான்களின் தாக்குதலை எதிர்பார்த்து, போராளிகள் மற்றும் முன்னாள் அரசு வீரர்கள் இணைந்து என்ஆர்எஃப் அமைப்பாக அங்கு நிலை கொண்டுள்ளனர்.
அமெரிக்காவின் தயாரிப்பான ஹம்வீஸ் உள்ளிட்ட நவீன கவச வாகனங்களில் தமது பகுதிகளில் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். அவர்கள் வெளியிட்ட புகைப்படங்களின் பின்னணியில் நவீன ஆயுதங்களுடன் பிக்கப் டிரக்குகள் உள்ளிட்ட வாகனங்களில் படையணியினர் செல்லும் காட்சிகள் உள்ளனர்.
-அவர்களில் பலர் இராணுவ சிருடைகளை அணிந்துள்ளனர்.
தாக்குதல் துப்பாக்கிகள், ஆர்பிஜிகள் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்களையும் புகைப்படங்களில் காண முடிந்தது.
பனியால் மூடப்பட்ட சிகரங்களில் அவர்கள் நிலை கொண்டுள்ளனர்.
“தாலிபான் போர்வீரர்கள் தாக்குதலைத் தொடங்கினால், அவர்கள் நிச்சயமாக எங்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்வார்கள்” என்று NRF தலைவர்களில் ஒருவரான அஹ்மத் மசூத் கடந்த வாரம் வோஷிங்டன் போஸ்ட்டில் கூறினார்.
அவர் தஜிக் தலைவர் அஹ்மத் ஷா மசூத்தின் மகன் ஆவார். அவர் பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கை சோவியத் எதிர்ப்பு மற்றும் தலிபான் எதிர்ப்பு கோட்டையாக மாற்றிய பெருமை பெற்றவர்.
பஞ்ச்ஷிர் மாகாணம் என்ஆர்எஃப் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆப்கானின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் முதல் துணை ஜனாதிபதி உள்ளிட்டவர்களும் அங்கு நிலைகொண்டுள்ளனர்.
தலிபான்கள் பிரச்சனையை சுமூகமாக தீர்க்க விரும்புவதாக கூறினாலும், நூற்றுக்கணக்கான போராளிகளை பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்குக்கு அனுப்பியதாக செவ்வாயன்று தலிபான் ஊடக அறிக்கைகள் கூறின.
தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறுகையில், பஞ்ச்ஷிர் மூன்று பக்கங்களால் சூழப்பட்டுள்ளது என்றார்.
அங்கு நிலைகொண்டுள்ள முன்னாள் துணைத் ஜனாதிபதி அம்ருல்லா சலே, “அந்தராப் பள்ளத்தாக்கு பகுதியில் உணவுப் பொருட்கள் வருவதையும், பெட்ரோல் வருவதையும் தலிபான்கள் தடை செய்கின்றன. மனிதாபிமான நிலை மோசமாக உள்ளது. ஆயிரக்கணக்கான பெண்களும் மலைகளுக்கு தப்பிச் சென்றனர்“ என ருவிட்டரில் பதிவிட்டார்.
தங்களிடம் ஆயுதங்களும் வெடிமருந்துகளும் இருப்பதாக அஹ்மத் மசூத் கூறினார். ஆனால் வெளி உலகத்தின் உதவியின்றி, தலிபான்களின் முற்றுகையை நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியாது என்று கூறினார்.
“எங்கள் இராணுவப் படைகளும் தளவாடங்களும் போதுமானதாக இருக்காது என்பதை நாங்கள் அறிவோம்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.



