விரைவில் பொருளாதார அபிவிருத்தி, நிதி அமைச்சராக பதவியேற்கவுள்ள இலங்கை மக்கள் முன்னணியின் நிறுவனர் பசில் ராஜபக்ஷ, கொழும்பு துறைமுக நகர திட்டம் மற்றும் இலங்கை முதலீட்டு வாரியத்திற்கு பொறுப்பாகஇருப்பார் என அரசாங்க வட்டாரங்களை மேற்கோளிட்டு சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொழும்பு துறைமுகம் தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ளது. இலங்கை முதலீட்டு வாரியம் தற்போது டிஜிட்டல் தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் உள்ளது.
புதிய பொருளாதார மேம்பாட்டு அமைச்சின் கீழ், ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் சாமல் ராஜபக்ஷ மற்றும் நமல் ராஜபக்ஷ ஆகியோரின் கீழ் உள்ள பல நிறுவனங்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பசில் ராஜபக்ஷ அடுத்த வியாழக்கிழமை (08) தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளார். அன்றைய தினம் அல்லது அதற்குப் பிறகு பொருளாதார அபிவிருத்தி மற்றும் நிதி அமைச்சராக பதவியேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.



